Enter your Email Address to subscribe to our newsletters

அமெரிக்கா, 31 ஜூலை (ஹி.ச.)
ஹமாஸ் அமைப்பை முழுமையாக ஆயுதமற்றதாக்குவதற்கான ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். காசாவை புதிய பாலஸ்தீன அரசாங்கம் ஆள்வதற்கு இது ஒரு முக்கியமான படி என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து சமூக தளத்தில் அவர் வெளியிட்ட பதிவில் கூறுகையில்,
இன்று, அமைதிக் குழு ஹமாஸ் மற்றும் காசாவில் உள்ள மற்ற அனைத்து ஆயுதக் குழுக்களையும் முழுமையாக ஆயுதமற்றதாக்குவதற்கான வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தத்தை எட்டியுள்ளது.
நீடித்த அமைதி மற்றும் பாதுகாப்பை நோக்கிய மகத்தான படி இது.
ஆயுத ஒழிப்பு நிறைவடையும் போது, இஸ்ரேலியப் படைகள் விலகிக்கொள்ளும், மேலும் சர்வதேச நிலைத்தன்மைப் படை புதிய பாலஸ்தீன காவல் படையுடன் இணைந்து காசாவின் பொறுப்பை ஏற்றுக்கொள்ளும்.
ஒரு வருடத்திற்கு முன்பு கடுமையான போர், மனிதாபிமான நெருக்கடி மற்றும் பணயக்கைதிகள் கொடூரமாக சிறைபிடிக்கப்பட்ட நிலை இருந்தது. நாம் வரலாற்று முன்னேற்றத்தை அடைந்துள்ளோம், இன்னும் நிறைய பணிகள் செய்ய வேண்டியுள்ளது.
முக்கிய முயற்சிகளை மேற்கொண்ட மத்தியஸ்தர்களான எகிப்து, கத்தார் மற்றும் துருக்கிக்கும், குறிப்பாக இந்த வரலாற்று திருப்புமுனையை சாத்தியமாக்கிய அயராது உழைத்த எனது சிறந்த குழுவினருக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்,
இவ்வாறு பதிவிடப்பட்டுள்ளது.
டிரம்பின் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, இஸ்ரேல் ஒப்பந்தத்தை கடைபிடிப்பதை மத்தியஸ்தர்களும், அமைதிக் குழுவும் உறுதி செய்யும் என்று எதிர்பார்ப்பதாக ஹமாஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளது.
ஹமாஸின் ஆயுதங்கள் மற்றும் காசாவிலிருந்து இஸ்ரேல் படிப்படியாக விலகுவது தொடர்பாக ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளது.
காசாவில் போரை முடிவுக்குக் கொண்டுவந்து அங்கு தொழில்நுட்ப வல்லுநர்களைக் கொண்ட அரசாங்கத்தை அமைப்பதற்கான டிரம்பின் பல கட்ட அமைதித் திட்டத்தை செயல்படுத்துவதில் ஹமாஸின் ஆயுத ஒழிப்பு ஒரு முக்கியமான படியாகும். இந்த திட்டத்தை செயல்படுத்துவது குறித்து ஹமாஸுடன் மத்தியஸ்தர்கள் பல மாதங்களாக பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர், ஆனால் ஹமாஸ் தனது பங்கை நிறைவேற்றும் என்பதில் அப்பகுதியில் சந்தேகம் நிலவுவதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
அக்டோபர் மாதத்திலிருந்து இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே காசாவில் போர் நிறுத்த ஒப்பந்தம் அமலில் இருந்தாலும், அதனை மேலும் முன்னெடுத்துச் செல்வதில் ஹமாஸின் ஆயுத ஒழிப்பு விவகாரம் ஒரு முக்கிய முட்டுக்கட்டையாக இருந்து வருகிறது.
போர் நிறுத்தம் இருந்தபோதிலும், காசாவில் வன்முறை தொடர்ந்து வருகிறது. ஜூலை 30 ஆம் தேதி இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் இரண்டு குழந்தைகள் உட்பட குறைந்தது நான்கு பேர் கொல்லப்பட்டதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையில், அமெரிக்கா, கத்தார் மற்றும் துருக்கியை உள்ளடக்கிய காசா போர் நிறுத்த மத்தியஸ்தர்களின் கூட்டம் விரைவில் கெய்ரோவில் நடைபெற உள்ளதாக எகிப்தின் அரசு தொடர்புடைய அல்-கஹேரா செய்தி நிறுவனம் இன்று அதிகாலை தெரிவித்துள்ளது.
Hindusthan Samachar / vidya.b