Enter your Email Address to subscribe to our newsletters

மதுரை, 31 ஜூலை (ஹி.ச.)
மதுரை மாவட்டம் சமயநல்லூரில் அந்த்யோதய அன்ன யோஜனா திட்டத்தின் கீழ் ஏழைகளுக்கு வழங்கப்படும் 35 கிலோ இலவச ரேஷன் அரிசியை நபர் ஒன்றுக்கு 7 கிலோவாகக் குறைத்து, உணவுப் பாதுகாப்புச் சட்டத்தில் திருத்தம் செய்யத் துடிக்கும்மத்திய அரசின் மக்கள் விரோத நடவடிக்கையைக் கண்டித்து விவசாய சங்களின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாதர் சங்க மாவட்ட செயலாளர் சரஸ்வதி தலைமை வகித்தார். சிஐடியு மதுரை புறநகர் மாவட்ட செயலாளர் மலை.கண்ணன் துவக்கி வைத்து பேசினார்.
மத்திய அரசின் இந்தத் சட்டத் திருத்தத்தால் இந்தியா முழுவதும் லட்சக்கணக்கான ஏழைக் குடும்பங்களின் உணவு உரிமை பறிபோவதுடன், ஆயிரக்கணக்கான மெட்ரிக் டன் அரிசி வெட்டப்பட்டு மக்கள் பட்டினிக்குத் தள்ளப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
எனவே சட்ட திருத்த மசோதவை கைவிட வேண்டும் என ஆர்ப்பாட்டத்தின் போது வலியுறுத்தப்பட்டது.
பின்னர் கோரிக்கையை விளக்கி விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் உமாமகேஸ்வரன் விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் வேல்பாண்டி,
மேற்கு ஒன்றிய செயலாளர் தனபாலன் ஆகியோர் பேசினார்கள்.
பின்னர் ஆர்ப்பாட்டத்தில் மதுரை மாநகராட்சி மேயர் (பொறுப்பு) நாகராஜன் கண்டன உரையாற்றினார்.
இறுதியாக சிஐடியு மாவட்ட தலைவர் அரவிந்தன் நிறைவு செய்து வைத்து பேசினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் சிஐடியு, விவசாயிகள் சங்கம், விவசாயத் தொழிலாளர் சங்கம் மற்றும் மாதர் சங்கம் ஆகிய சங்கங்களின் மதுரை புறநகர் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
சிஐடியு சார்பில் மனோகரன், கருணாநிதி, த.வி. சங்கம் சார்பில் செந்தில் குமரன் அய்யாவு, வி.தொ.சங்கம் தெய்வேந்திரன், ராமமூர்த்தி, கிருஷ்ணமூர்த்தி, மாதர் சங்கம் சார்பில் தேவி தமிழ் கொடி வேலம்மாள் மற்றும் சங்க நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்.
Hindusthan Samachar / vidya.b