Enter your Email Address to subscribe to our newsletters

விருதுநகர், 31 ஜூலை (ஹி.ச.)
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள முத்துசாமிபுரத்தில் இயங்கி வரும் கீர்த்திக்ரிஷி பட்டாசு ஆலையில் இன்று காலை எதிர்பாராத வெடிவிபத்து ஏற்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பட்டாசுகள் தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தபோது திடீரென வெடிபொருட்கள் வெடித்து சிதறியதாக கூறப்படுகிறது. இந்த கோர விபத்தில் அங்கு பணியாற்றிக் கொண்டிருந்த சுப்பிரமணி(வயது 55) என்ற தொழிலாளி படுகாயமடைந்தார்.
வெடிச்சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து படுகாயமடைந்த அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சாத்தூர் தாலுகா காவல்துறையினர் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாதுகாப்பு விதிமுறைகள் முறையாக பின்பற்றப்பட்டதா, வெடிவிபத்துக்கான காரணம் என்ன என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
Hindusthan Samachar / vidya.b