Enter your Email Address to subscribe to our newsletters

கோவை, 31 ஜூலை (ஹி.ச)
கோவை மாவட்டம் கணபதி பாரதி நகர் பகுதியைச் சேர்ந்த ஓ. செல்வம் மற்றும் கார்த்திகேயன் ஆகிய இருவரும் சேர்ந்து, கடந்த 30 ஆண்டுகளாகச் சரவணம்பட்டி கெளமார மடாலயம் அருகே பந்தல் அலங்காரப் பொருட்கள் வைக்கும் குடோனை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று இரவு வழக்கம் போல் குடோனைப் பூட்டி விட்டுச் சென்ற நிலையில், இரவில் திடீரெனக் குடோனுக்குள் தீப்பற்றி எரியத் தொடங்கியது.
பந்தல் அலங்காரத்திற்காக வைக்கப்பட்டு இருந்த மூங்கில் மரங்கள், துணிகள், பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் மரப் சாமான்களில் தீ வேகத்தில் பரவி, குடோன் முழுவதையும் சூழ்ந்தது. இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாகத் தீயணைப்புத் துறைக்குத் தகவல் தெரிவித்தனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கணபதி மற்றும் தெற்கு தீயணைப்பு நிலைய வீரர்கள், தண்ணீரைப் பாய்ச்சி அடித்துச் சுமார் 3 மணி நேரம் தீவிரமாகப் போராடித் தீ மேலும் பரவாமல் அணைத்தனர்.
இருப்பினும், இந்த விபத்தில் குடோனில் இருந்த பல லட்சம் ரூபாய் மதிப்பிலான அலங்காரப் பொருட்கள் முற்றிலும் எரிந்து சேதமடைந்தன.
அதிர்ஷ்டவசமாக இதில் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை. இந்த தீ விபத்துக்கான காரணம் குறித்துச் சரவணம்பட்டி காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Hindusthan Samachar / vidya.b