Enter your Email Address to subscribe to our newsletters

தமிழ்நாடு, 31 ஜூலை (ஹி.ச.)
திருப்பூர் மாவட்டம் இடுவம்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த 10 மாணவ-மாணவிகள் நீட் மருத்துவ நுழைவுத் தேர்வில் வெற்றி பெற்றதற்கு, தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பாராட்டு தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில்,
அரிய சாதனைகள் எப்போதும் எளிய பின்னணியில் இருந்தே தொடங்குகின்றன என்பதை இடுவம்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
நடப்பு நீட் தேர்வில் வெற்றி பெற்று மருத்துவக் கனவை நனவாக்கிய 10 மாணவ-மாணவிகளுக்கும் தனது மனமார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துள்ள அவர், இவர்களில் 9 பேர் முதல் முயற்சியில் தோல்வியடைந்தபோதும் மனம் தளராமல் மீண்டும் தேர்வு எழுதி வெற்றி பெற்றிருப்பது விடாமுயற்சிக்கு சிறந்த எடுத்துக்காட்டு என்றும் கூறியுள்ளார்.
மேலும், மாணவர்களின் வெற்றிக்கு துணைநின்ற பெற்றோர் மற்றும் அர்ப்பணிப்புடன் வழிகாட்டிய ஆசிரியர்களுக்கும் தனது பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.
சமூக மற்றும் பொருளாதாரப் பின்னணி ஒருவரது கனவுகளுக்குத் தடையாக இருக்க முடியாது என்பதை இந்த மாணவர்களின் சாதனை நிரூபித்துள்ளதாக குறிப்பிட்டுள்ள நயினார் நாகேந்திரன், அவர்கள் எதிர்காலத்தில் சிறந்த மருத்துவர்களாக உருவாகி ஏழை, எளிய மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்று தனது பதிவில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / VINOTH KUMAR P