Enter your Email Address to subscribe to our newsletters

புதுச்சேரி, 04 ஜூலை (ஹி.ச.)
கடந்த 2022-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 8 அன்று, புதுச்சேரி லாஸ்பேட்டை எழில் நகரில் வசிக்கும் தனது தம்பி மரியகுலம் மற்றும் அவரது மனைவி கரோலின் ஆகியோரை, சொத்து மற்றும் தொழில் போட்டி காரணமாக தமிழக நிதி அமைச்சர் மரிய வில்சன் மற்றும் அவரது தந்தை ஆகியோர் வீடு புகுந்து கட்டையால் தாக்கியதாகக் கூறப்படுகிறது.
இது தொடர்பாக மரிய கிலோத் அளித்த புகாரின் அடிப்படையில், சகோதரர் மற்றும் அவரது மனைவியை வீடு புகுந்து தாக்கியதுடன் கொலை மிரட்டல் விடுத்ததாகவும் மரிய வில்சன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கின் விசாரணையை முடித்த காவல்துறையினர், நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையை ஏற்கனவே தாக்கல் செய்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, சகோதரரை தாக்கிய வழக்கில் அமைச்சர் மரிய வில்சன் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என முன்னதாக உத்தரவிடப்பட்டிருந்தது.
இந்நிலையில், தற்போது பட்ஜெட் தயாரிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதால் அமைச்சர் மரிய வில்சனால் இன்று நீதிமன்றத்தில் ஆஜராக முடியவில்லை என அவரது வழக்கறிஞர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, வரும் ஜூலை 10-ஆம் தேதி கண்டிப்பாக நேரில் ஆஜராக வேண்டும் என அமைச்சர் மரிய வில்சனுக்கு உத்தரவிட்டுள்ளார்.
Hindusthan Samachar / vidya.b