Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 04 ஜூலை (ஹி.ச)
தென்னிந்திய பத்திரிகையாளர்கள் யூனியன் (SIJU) சார்பில் நடத்தப்படும்
2-வது ஆண்டு மீடியா கிரிக்கெட் சாம்பியன்ஷிப் 2026 தொடர், சென்னையில் இன்று (ஜூலை 4, 2026) அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது.
சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, போதைக்கு எதிரான விழிப்புணர்வை
(Say No To Drugs) ஏற்படுத்தும் உன்னத நோக்கத்துடன் இப்போட்டி நடத்தப்படுகிறது.
இந்தத் தொடக்க விழாவில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் ஸ்ரீநாத், சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகர் மற்றும் சென்னை காவல் ஆணையர் டாக்டர் ஏ. அமல்ராஜ் ஐபிஎஸ் ஆகியோர் நேரில் பங்கேற்று, பேட்டிங் செய்து போட்டியைத் தொடங்கி வைத்தனர்
இக்கிரிக்கெட் போட்டியின் தொடக்க விழாவில் கலந்து கொண்டு பேசிய சென்னை காவல் ஆணையர் அமல்ராஜ் கூறுகையில்,
இளைஞர்கள் விளையாட்டுத் துறையில் முழுமையாக கவனம் செலுத்துவதன் மூலம் போதைப் பழக்கம் இல்லாத தமிழ்நாட்டை உருவாக்க முடியும்.
விளையாட்டுகளில் தொடர்ந்து ஈடுபட்டு முறையான பயிற்சி மேற்கொள்வது இளைஞர்களை நல்வழிப்படுத்தும்.
உடல் வலிமையையும் மன உறுதியையும் வளர்க்கும் விளையாட்டு, இளைய தலைமுறையினரை போதை போன்ற சமூக சீர்கேடுகளிலிருந்து பாதுகாக்கும் அரணாக செயல்படும்.
போதைப் பொருட்களின் பிடியில் இருந்து மாநிலத்தை மீட்க, பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களிடையே விளையாட்டு கலாச்சாரத்தை ஊக்குவிக்க வேண்டியதன் அவசியம் தற்போது ஏற்பட்டுள்ளது.
விளையாட்டு மைதானங்கள் நிரம்பினால், போதைப்பொருள் புழக்கம் குறையும்.
தொடர்ந்து இதுபோன்ற விளையாட்டு போட்டிகளை நடத்துவதன் மூலம் சமூக விழிப்புணர்வை ஏற்படுத்த முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.
விழாவில் பத்திரிகையாளர்கள், விளையாட்டு வீரர்கள் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள புகழ்பெற்ற நியூ கல்லூரி மைதானத்தில் இக்கிரிக்கெட் போட்டிகள் இன்று, நாளை மற்றும் ஜூலை 11, 12 ஆகிய வார இறுதி நாட்களில் நடைபெறுகிறது.
மொத்தம் 32 ஊடக அணிகள் மற்றும் 2 சிங்கப்பெண்கள் (பெண்கள்) அணிகள் என இப்போட்டிகளில் ஊடகத் துறையினர் உற்சாகத்துடன் பங்கேற்றுள்ளனர்.
Hindusthan Samachar / vidya.b