Enter your Email Address to subscribe to our newsletters

சேலம், 04 ஜூலை (ஹி.ச.)
சேலம் மாவட்டம் ஓமலூரில் இன்று நடைபெற்ற விடுதலை சிறுத்தைகள் கட்சியின் (விசிக) மாநில செயற்குழுக் கூட்டத்தில், கட்சித் தலைவர் திருமாவளவனை துணை முதலமைச்சராக நியமிக்க வேண்டும் என்றும், திருச்சி கிழக்கு சட்டப்பேரவை இடைத்தேர்தலில் அவர் போட்டியிட வேண்டும் என்றும் வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் பங்கேற்ற இந்தக் கூட்டத்தில், மாநில அரசியல் சூழல், கூட்டணி நிலை, கட்சியின் அடுத்தகட்ட அரசியல் நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடைபெற்றது.
அப்போது, ஆளும் கூட்டணியில் இடம்பெற்றுள்ள விசிக-க்கு உரிய அரசியல் அங்கீகாரம் வழங்கும் வகையில், கட்சித் தலைவர் திருமாவளவனை துணை முதலமைச்சராக நியமிக்க வேண்டும் என்று செயற்குழு உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர்.
மேலும், விரைவில் நடைபெறவுள்ள திருச்சி கிழக்கு சட்டப்பேரவை இடைத்தேர்தலில் திருமாவளவன் நேரடியாக போட்டியிட வேண்டும் என்றும் செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்தத் தீர்மானங்கள் கட்சியின் அரசியல் நிலைப்பாட்டை வெளிப்படுத்துவதாகக் கருதப்படும் நிலையில், கூட்டணிக் கட்சிகளின் அடுத்தகட்ட அணுகுமுறை குறித்து அரசியல் வட்டாரங்களில் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
Hindusthan Samachar / GOKILA arumugam