Enter your Email Address to subscribe to our newsletters

சிவகாசி, 05 ஜூலை (ஹி.ச.)
விருதுநகர் மாவட்டம் சிவகாசி ஐயப்பன் காலனி பகுதியில் வசித்து வரும் அச்சக உரிமையாளர் அரவிந்த்ராம் மற்றும் அவரது குடும்பத்தினர் நேற்று இரவு வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தபோது, சுவர் ஏறி குதித்து உள்ளே நுழைந்த முகமூடி அணிந்த மர்ம கும்பல், திடீரென தாக்குதலைத் தொடங்கியது.
தடுக்க முயன்ற அச்சக உரிமையாளர் அரவிந்த்ராம் உள்ளிட்டோரை வாளால் வெட்டி காயப்படுத்திய கும்பல், பீரோவில் இருந்த 93 சவரன் தங்க நகைகள் மற்றும் ரூ.10 ஆயிரம் ரொக்கப் பணத்தை கொள்ளையடித்துக் கொண்டு தப்பிச் சென்றது.
வாள்வெட்டில் படுகாயமடைந்த அரவிந்த்ராம் சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் திரண்டு வருவதற்குள் கொள்ளையர்கள் இருசக்கர வாகனங்களில் தப்பிச் சென்றுவிட்டனர்.
இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த சிவகாசி நகர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன.
வீடு புகுந்து ஆயுதங்களுடன் தாக்கி கொள்ளையடித்துச் சென்ற முகமூடி கும்பலை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர வலைவீச்சு நடைபெற்று வருகிறது.
தொழில் நகரமான சிவகாசியில், குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து வாளால் வெட்டி நகை-பணத்தை கொள்ளையடித்த சம்பவம் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
Hindusthan Samachar / vidya.b