Enter your Email Address to subscribe to our newsletters

திருவள்ளூர், 05 ஜூலை (ஹி.ச.)
திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அருகே உள்ள தனியார் இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு ஏற்பட்ட விபத்தில் 18 தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், தொழிற்சாலையில் தேங்கியுள்ள அமோனியா வாயுவை முழுமையாக அகற்றும் பணி இரண்டாவது நாளாக ஞாயிற்றுக்கிழமை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
நேற்று காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற்ற பணியில், சுமார் 2 டன் அளவிலான அமோனியா வாயு பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றி அகற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தற்போது இரண்டாவது நாளாகவும், தீயணைப்புத் துறை, தொழிற்சாலை பாதுகாப்புத் துறை மற்றும் தொழில்நுட்ப நிபுணர்கள் இணைந்து பாதுகாப்பு உபகரணங்களுடன் அமோனியா வாயுவை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
பணியின் போது சுற்றுப்புற பகுதிகளில் பாதுகாப்பு நடவடிக்கைகளும் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றன.
அமோனியா வாயு முழுமையாக அகற்றப்பட்ட பிறகே தொழிற்சாலைக்குள் விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, விபத்திற்கான காரணம் குறித்து தொழில்நுட்ப மற்றும் தடயவியல் விசாரணை தீவிரப்படுத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Hindusthan Samachar / VINOTH KUMAR P