Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 05 ஜூலை (ஹி.ச.)
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு முன்னாள் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டு இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், அவரது 2-ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி சென்னை பெரம்பூர் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்ட பெரம்பூர் பந்தர் கார்டன், வேணுகோபால்சாமி கோவில் தெரு, சடையப்பதாஸ் தெரு உள்ளிட்ட பகுதிகள் முழுவதும் போலீசாரின் தீவிர கண்காணிப்பில் உள்ளன.
அவரது வீடு மற்றும் அலுவலகம் அமைந்துள்ள பகுதிகளில் பேரிகார்டுகள் அமைக்கப்பட்டு, வெளிநபர்கள் வாகனங்களில் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில், அந்தத் தெருவில் செயல்பட்டு வரும் 24 மணி நேர அவசர சிகிச்சை வசதி கொண்ட தனியார் மருத்துவமனைக்கு செல்லும் நோயாளிகள் மற்றும் அவர்களுடன் வருபவர்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.
புளியந்தோப்பு காவல் மாவட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் 7 உதவி ஆணையர்கள் தலைமையில் 300-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் இன்று முழுவதும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
ஆம்ஸ்ட்ராங் நினைவு நாளையொட்டி ஏராளமானோர் அஞ்சலி செலுத்த வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், எந்தவித அசம்பாவிதமும் ஏற்படாத வகையில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
Hindusthan Samachar / GOKILA arumugam