Enter your Email Address to subscribe to our newsletters

நவக்கரை, 05 ஜூலை (ஹி.ச.)
கோவை மாவட்டத்தின் திருவண்ணாமலை என்று அழைக்கப்படும் 'தர்மலிங்கேஸ்வரர் மலைக் கோவில்' அமைந்துள்ள நவக்கரை பகுதியில் கஞ்சா மற்றும் போதை மாத்திரைகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உதயகுமார் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் இன்று அதிரடி சோதனை நடத்தினர்.
மோப்பநாய் படையின் உதவியுடன் நடத்தப்பட்ட இந்த விரிவான சோதனையில், போதைப்பொருட்களை பதுக்கி வைத்திருந்த ஹரி மற்றும் பப்லு ஆகிய இருவர் கைது செய்யப்பட்டு தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து கணிசமான அளவில் கஞ்சா மற்றும் தடை செய்யப்பட்ட போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
முதற்கட்ட விசாரணையில், கைது செய்யப்பட்டவர்கள் திருப்பூர், புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கும் போதைப்பொருட்களை விநியோகம் செய்து வந்தது தெரியவந்துள்ளது.
இந்த வலைப்பின்னலில் மேலும் சிலர் தொடர்புடையவர்களாக இருக்கலாம் என சந்தேகிக்கும் போலீசார், அவர்களை கண்டறியும் பணியில் தீவிரம் காட்டி வருகின்றனர்.
நவக்கரை பகுதியில் சமீபகாலமாக போதைப்பொருள் நடமாட்டம் அதிகரித்துள்ளதாக பொதுமக்களிடம் இருந்து தொடர் புகார்கள் வந்ததை அடுத்து, எஸ்.பி உதயகுமார் நேரடி கண்காணிப்பில் இந்த சிறப்பு சோதனை திட்டமிடப்பட்டது.
போதைப்பொருள் கடத்தலுக்கு எதிரான நடவடிக்கைகள் தொடர்ந்து தீவிரப்படுத்தப்படும் எனவும், இளைஞர்களை சீரழிக்கும் இத்தகைய செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
கைது செய்யப்பட்ட இருவர் மீதும் போதைப்பொருள் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருட்களின் மொத்த மதிப்பு மற்றும் எடை குறித்த விவரங்களை காவல்துறை சேகரித்து வருகிறது.
Hindusthan Samachar / vidya.b