Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 05 ஜூலை (ஹி.ச.)
மொபைல் செயலி மூலம் மின் நுகர்வு ரீடிங் எடுக்கும் பணியில் ஈடுபடும் களப்பணியாளர்களுக்கு மொபைல் போன் மற்றும் போஸ்ட் பெய்ட் சி.யு.ஜி. (CUG) சிம் கார்டு வாங்குவதற்காக ரூ.10 ஆயிரம் நிதியுதவி வழங்க தமிழ்நாடு மின்சார வாரியம் உத்தரவிட்டுள்ளது.
மின் நுகர்வு விவரங்களை துல்லியமாகவும், விரைவாகவும் பதிவு செய்வதற்காக மின்சார வாரியம் தற்போது மொபைல் செயலி வாயிலாக ரீடிங் எடுக்கும் முறையை நடைமுறைப்படுத்தியுள்ளது.
இதற்காக களப்பணியாளர்கள் நவீன வசதிகள் கொண்ட மொபைல் போன் மற்றும் போஸ்ட் பெய்ட் சி.யு.ஜி. சிம் கார்டுகளை பயன்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதால், அதற்கான செலவினத்தை ஈடுகட்டும் வகையில் இந்த நிதியுதவி வழங்கப்படுகிறது.
இதன்படி, தகுதியுடைய ரீடிங் பணியாளர்களுக்கு மொபைல் போன் மற்றும் சி.யு.ஜி. சிம் கார்டு வாங்குவதற்காக தலா ரூ.10 ஆயிரம் வழங்கப்படும்.
இந்த நிதியுதவி ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை வழங்கப்படும் என்றும் மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.
இந்த நடவடிக்கை மூலம் மின் நுகர்வு கணக்கீட்டில் துல்லியம் அதிகரிப்பதுடன், நுகர்வோருக்கு விரைவாக மின் கட்டண விவரங்களை வழங்கவும், களப்பணியாளர்களின் பணித்திறனை மேம்படுத்தவும் உதவும் என மின்சார வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Hindusthan Samachar / P YUVARAJ