Enter your Email Address to subscribe to our newsletters

மதுரை, 05 ஜூலை (ஹி.ச.)
தமிழ்நாடு முழுவதும் போதைப் பொருள் விற்பனை, பயன்பாடு உள்ளிட்டவற்றை ஒழிப்பதற்காக, சிறப்பு சோதனைகள் மற்றும் தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், சட்டம் ஒழுங்கை நிலைநாட்டவும், போதை பொருளை தடுக்கவும் மதுரை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் தேவநாதன் உத்தரவின் பேரில், மாவட்டம் முழுவதும் போதை பொருள் தடுப்பு தீவிர சிறப்பு வேட்டை (Special Drive) நடத்தப்பட்டது.
இந்த சோதனையில் மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர்கள், காவல் ஆய்வாளர்கள், சார்பு ஆய்வாளர்கள் ஆகியோர் போதைப் பொருள் தடுப்பு தீவிர சிறப்பு வேட்டையில் ஈடுபட்டனர். அதில் 10 நபர்களை கைது செய்தனர். மேலும், அவர்களிடமிருந்து சுமார் 6.5 கிலோ கஞ்சா மற்றும் 24 போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
அதேபோல, குட்கா விற்பனை செய்த குற்றத்திற்காக 3 நபர்கள் கைது செய்யப்பட்டு, அவர்களிடமிருந்து சுமார் 12.5 கிலோ குட்கா கைப்பற்றப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட நபர்கள் அனைவரும் உரிய சட்ட நடைமுறைகளுக்குப் பின் நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டனர்.
போதைப் பொருள்களை விற்பனை செய்பவர்கள் மற்றும் சட்ட விரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது இத்தகைய கடுமையான அதிரடி நடவடிக்கைகள் தொடரும் என மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தேவநாதன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அதேபோல கடந்த ஜூலை 3 ஆம் தேதி மாவட்டம் முழுவதும் சரித்திரப் பதிவேடு குற்றவாளிகளுக்கு எதிரான அதிரடி சிறப்பு வேட்டை (Storming Operation) நடைபெற்றது.
இந்த நடவடிக்கையில், அன்று ஒரே நாளில் 22 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
குறிப்பாக, அவர்களிடமிருந்து அபாயகரமான ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
Hindusthan Samachar / ANANDHAN