ஆர்.டி.ஐ. புதிய விதிகள் - உண்ணாவிரதப் போராட்டத்தை ஒத்திவைத்தார் அன்னா ஹசாரே
மும்பை , 05 ஜூலை (ஹி.ச.) புதிய தகவல் அறியும் உரிமை (ஆர்.டி.ஐ.) சட்ட விதிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று முதல் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்குவதாக அறிவித்திருந்த சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே, தனது போராட்டத்தை ஒத்திவைப்பதாக அறிவித்துள்ளார்
A


மும்பை , 05 ஜூலை (ஹி.ச.)

புதிய தகவல் அறியும் உரிமை (ஆர்.டி.ஐ.) சட்ட விதிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று முதல் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்குவதாக அறிவித்திருந்த சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே, தனது போராட்டத்தை ஒத்திவைப்பதாக அறிவித்துள்ளார்.

ஆர்.டி.ஐ. சட்டத்தின் அடிப்படை நோக்கத்தையே பலவீனப்படுத்தும் வகையில் புதிய விதிகள் இருப்பதாகக் கூறி அவற்றை ரத்து செய்ய வேண்டும் என்று அன்னா ஹசாரே வலியுறுத்தி வந்தார். இதற்கிடையில், சர்ச்சைக்குரிய புதிய விதிகளுக்கு மாநில அரசு இடைக்காலத் தடை விதித்துள்ளது.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

மக்களின் ஒற்றுமையும், ஜனநாயக ரீதியிலான போராட்டமும் காரணமாகவே முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் புதிய விதிகளுக்கு இடைக்காலத் தடை விதிக்கும் முடிவை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

அதேநேரத்தில், இது தற்காலிகத் தடை மட்டுமே என்றும், புதிய விதிகளை அரசு முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்பதே தங்களது கோரிக்கை என்றும் அவர் கூறியுள்ளார்.

அவ்வாறு நிரந்தர முடிவு எடுக்கப்படாவிட்டால், மீண்டும் மிகப்பெரிய ஜனநாயகப் போராட்டம் முன்னெடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளார்.

இதையடுத்து, இன்று தொடங்கவிருந்த தனது காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை ஒத்திவைப்பதாக அறிவித்துள்ள அன்னா ஹசாரே, நான் அரசை நம்பி இந்தப் போராட்டத்தை ஒத்திவைக்கவில்லை.

மாறாக, அரசு எடுத்துள்ள நேர்மறையான முயற்சிக்கு ஒரு வாய்ப்பு அளிக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA