Enter your Email Address to subscribe to our newsletters

திருவாரூர், 05 ஜூலை (ஹி.ச.)
திருவாரூர் மாவட்டத்தில் 2025-26 நிதியாண்டில் நெல் கொள்முதல் புதிய உச்சத்தை எட்டியுள்ளதாக மாவட்ட ஆட்சியர் மோகனசந்திரன் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.
நடப்பு நிதியாண்டில் காரீப், குறுவை, சம்பா மற்றும் தாளடி ஆகிய பருவங்களில் மொத்தம் 9.70 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
இது மாவட்ட வரலாற்றில் இதுவரை இல்லாத அளவாகும்.
கடந்த 2024-25 நிதியாண்டில் 8.04 லட்சம் மெட்ரிக் டன் நெல் மட்டுமே கொள்முதல் செய்யப்பட்டிருந்த நிலையில், இந்த ஆண்டு கூடுதலாக 1.66 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு சாதனை படைக்கப்பட்டுள்ளது.
இது சுமார் 20.6% வளர்ச்சியைக் காட்டுகிறது.
இவ்வாறு கொள்முதல் செய்யப்பட்ட நெல்லுக்கான தொகையாக மாவட்டத்தைச் சேர்ந்த 1.19 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.2,189 கோடி வழங்கப்பட்டுள்ளதாகவும் ஆட்சியர் தெரிவித்தார்.
அரசின் கொள்முதல் நிலையங்கள் மூலம் உரிய நேரத்தில் கொள்முதல் செய்யப்பட்டதும், விவசாயிகளுக்கு உடனடியாக பணம் வழங்கப்பட்டதும் இந்த சாதனைக்கு முக்கிய காரணம் என அவர் குறிப்பிட்டார்.
டெல்டா மாவட்டங்களின் நெற்களஞ்சியமாக விளங்கும் திருவாரூரில் நான்கு பருவ சாகுபடியிலும் எதிர்பார்த்ததை விட கூடுதல் மகசூல் கிடைத்ததால் கொள்முதல் அளவு கணிசமாக உயர்ந்துள்ளது.
விவசாயிகளின் நலன் கருதி தொடர்ந்து அனைத்து வசதிகளும் செய்து தரப்படும் எனவும் ஆட்சியர் மோகனசந்திரன் உறுதியளித்தார்.
Hindusthan Samachar / vidya.b