Enter your Email Address to subscribe to our newsletters

தென்காசி, 05 ஜூலை (ஹி.ச.)
தென்காசி மாவட்டம் நெற்கட்டும் சேவல் பகுதியில் விவசாயிகள் பயன்பாட்டிற்காக சேமித்து வைக்கப்பட்டிருந்த வைக்கோல் கட்டுகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்த இடத்தில் நேற்று மாலை திடீரென தீப்பிடித்து எரியத் தொடங்கியது.
காற்றின் வேகம் காரணமாக தீ மளமளவென அனைத்து கட்டுகளிலும் பரவியதால் கரும்புகை சூழ்ந்து பகுதி முழுவதும் பதற்றம் நிலவியது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தென்காசி தீயணைப்பு நிலைய வீரர்கள், தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
சுமார் 10 மணி நேரம் தொடர்ந்து போராடியும் தீயை முழுமையாக அணைக்க முடியவில்லை.
வைக்கோல் எளிதில் தீப்பற்றும் தன்மை கொண்டதால் உள்ளுக்குள் கனன்று எரிந்ததே தாமதத்திற்கு காரணம் என தீயணைப்புத் துறையினர் தெரிவித்தனர்.
இந்த தீ விபத்தில் சுமார் 12,000 வைக்கோல் கட்டுகள் முற்றிலும் எரிந்து சாம்பலாகின.
இதன் மதிப்பு சுமார் ரூ.20 லட்சம் இருக்கும் என வைக்கோல் கட்டுகளின் உரிமையாளர் வேதனையுடன் தெரிவித்தார்.
கால்நடை தீவனத்திற்காகவும், விற்பனைக்காகவும் சேமித்து வைக்கப்பட்டிருந்த வைக்கோல் எரிந்ததால் விவசாயிகள் பெரும் நஷ்டத்தை சந்தித்துள்ளனர்.
தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மின்கசிவு காரணமாகவோ அல்லது மர்ம நபர்களின் செயலாலோ தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
Hindusthan Samachar / vidya.b