மாமனார் வீட்டில் ரூ.10 கோடி மதிப்புள்ள 1,000 சவரன் நகை திருட்டு - மருத்துவர் உட்பட 3 பேர் மீது குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு
கோவை, 06 ஜூலை (ஹி.ச.) கோவை கணபதி நகரைச் சேர்ந்த பிரபல ரியல் எஸ்டேட் தொழிலதிபர் சண்முகபாண்டியன் (67). இவரது மகள், கடந்த 2024 பிப்ரவரி மாதம் டாக்டர் எம். விக்னேஷ் என்பவருக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டார். விக்னேஷின் குடும்பத்தினருக்கு இருந்த நித
நகை


கோவை, 06 ஜூலை (ஹி.ச.)

கோவை கணபதி நகரைச் சேர்ந்த பிரபல ரியல் எஸ்டேட் தொழிலதிபர் சண்முகபாண்டியன் (67). இவரது மகள், கடந்த 2024 பிப்ரவரி மாதம் டாக்டர் எம். விக்னேஷ் என்பவருக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டார்.

விக்னேஷின் குடும்பத்தினருக்கு இருந்த நிதி நெருக்கடி காரணமாக, சண்முகபாண்டியன் தனது மருமகனையும் அவரது குடும்பத்தாரையும் கோவையில் உள்ள காளப்பட்டி இல்லத்தில் தங்க வைத்துள்ளார்.

சில மாதங்களுக்குப் பிறகு, சண்முகபாண்டியனின் வீட்டை தன் பெயருக்கு மாற்றித் தருமாறு மனைவிக்கு டாக்டர் விக்னேஷ் அழுத்தம் கொடுத்ததாகக் கூறப்படுகிறது.

இதனால் குடும்பத்திற்குள் விரிசல் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து, கடந்த 2025 டிசம்பரில் அந்த சொத்தை சண்முகபாண்டியன் மற்றொரு நபருக்கு ரூ.15 கோடிக்கு விற்பனை செய்தார். இதனால் அதிருப்தியடைந்த விக்னேஷின் குடும்பத்தினர் திடீரென அந்த வீட்டை காலி செய்துவிட்டு வெளியேறினர்.

அவர்களின் திடீர் வெளியேற்றத்தால் சந்தேகமடைந்த சண்முகபாண்டியன், விக்னேஷிடம் தனது லாக்கர் சாவியைத் திரும்பக் கேட்டுள்ளார். ஆனால் அவர் சாவியைத் தர மறுத்ததால், லாக்கரை உடைத்துப் பார்த்தபோது சண்முகபாண்டியன் அதிர்ச்சியடைந்தார்.

அதில் வைக்கப்பட்டிருந்த சுமார் ரூ.10 கோடி மதிப்பிலான 1,000 சவரன் (8 கிலோ) தங்க நகைகள் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது.

இதுகுறித்து விக்னேஷிடம் கேட்டபோது, அவர் மற்றும் அவரது குடும்பத்தினர் வெறும் 100 சவரன் நகைகளை மட்டும் திருப்பித் தந்துவிட்டு, மீதி நகைகளைத் தராமல் சண்முகபாண்டியனுக்குக் கொலை மிரட்டல் விடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

பாதிக்கப்பட்ட தொழிலதிபர் சண்முகபாண்டியன் இதுகுறித்து கோவை மாநகர குற்றப்பிரிவில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில், நகைகளைத் திருடியதாக மருமகன் டாக்டர் எம். விக்னேஷ், அவரது தாய் வாசுகி மற்றும் சகோதரி டாக்டர் எம். ஜீவிதா ஆகிய மூன்று பேர் மீதும் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Hindusthan Samachar / GOKILA arumugam