கரூர் ரயில் நிலையத்தில் நாளை பராமரிப்பு பணி - முக்கிய ரயில் சேவைகளில் மாற்றங்கள்
கரூர், 06 ஜூலை (ஹி.ச) கரூர் ரயில் நிலையத்தில் நாளை (ஜூலை 7 ஆம் தேதி) தண்டவாளம் புதுப்பித்தல் பணி நடைபெற உள்ளதாக சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது. இந்த பராமரிப்பு பணிகளை முன்னிட்டு பல ரயில்களின் சேவையில் தற்காலிக மாற்றங்கள் செய்யப்பட்டுள்
கரூர் ரயில் நிலையத்தில் நாளை பராமரிப்பு பணி - முக்கிய ரயில் சேவைகளில் மாற்றங்கள்


கரூர், 06 ஜூலை (ஹி.ச)

கரூர் ரயில் நிலையத்தில் நாளை (ஜூலை 7 ஆம் தேதி) தண்டவாளம் புதுப்பித்தல் பணி நடைபெற உள்ளதாக சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.

இந்த பராமரிப்பு பணிகளை முன்னிட்டு பல ரயில்களின் சேவையில் தற்காலிக மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

பயணிகள் தங்கள் பயணத்தை திட்டமிடும்போது இந்த மாற்றங்களை கவனத்தில் கொள்ளுமாறு ரயில்வே நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.

ரயில்வே அறிவிப்பின்படி, திருச்சியில் இருந்து ஈரோட்டுக்கு இயக்கப்படும் பயணிகள் ரயில் நாளை கரூர் வரை மட்டுமே இயக்கப்படும். அதேபோல், ஈரோட்டில் இருந்து திருச்சி செல்லும் பயணிகள் ரயில் மூர்த்திபாளையம் வரை மட்டுமே இயக்கப்பட்டு அங்கு நிறுத்தப்படும்.

இதனால் ஈரோடு மற்றும் திருச்சி மார்க்கத்தில் பயணிக்கும் பயணிகள் மாற்று ஏற்பாடுகளை செய்து கொள்ள வேண்டியுள்ளது.

விரைவு ரயில் சேவைகளிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

16845 எண் கொண்ட ஈரோடு முதல் செங்கோட்டை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில், வழக்கமாக ஈரோட்டில் இருந்து புறப்படுவதற்கு பதிலாக, நாளை மதியம் 3:05 மணிக்கு கரூர் ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும்.

அதேபோல், 16846 எண் கொண்ட செங்கோட்டை முதல் ஈரோடு செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் கரூர் வரை மட்டுமே இயக்கப்படும். அதன் பின்னர், கரூரில் இருந்து ஈரோடு வரை சிறப்பு ரயிலாக இயக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மேலும், 16843 எண் கொண்ட திருச்சி முதல் பாலக்காடு செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில், திருச்சியில் இருந்து புறப்படாமல் நாளை மதியம் 2:20 மணிக்கு கரூர் ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும்.

இந்த தற்காலிக மாற்றங்கள் ஜூலை 7 ஆம் தேதி ஒருநாள் மட்டுமே அமலில் இருக்கும் என்றும், பராமரிப்பு பணிகள் முடிந்தவுடன் வழக்கமான சேவைகள் மீண்டும் தொடங்கும் என்றும் சேலம் ரயில்வே கோட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.

பயணிகளின் பாதுகாப்பு மற்றும் ரயில் பாதையின் தரத்தை மேம்படுத்தும் நோக்கில் இந்த தண்டவாள புதுப்பித்தல் பணி மேற்கொள்ளப்படுவதாக ரயில்வே துறை விளக்கம் அளித்துள்ளது.

எனவே, பயணிகள் ரயில் நிலையங்களில் உள்ள விசாரணை மையங்களை தொடர்பு கொண்டு கூடுதல் விவரங்களை பெற்றுக்கொள்ளலாம்.

Hindusthan Samachar / vidya.b