Enter your Email Address to subscribe to our newsletters

திருவண்ணாமலை, 08 ஜூலை (ஹி.ச.)
திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் ஆனி மாத பிரம்மோற்சவ விழா இன்று காலை கோலாகலமாக தொடங்கியது.
இந்த விழாவின் தொடக்க நிகழ்வாக, கோயிலின் 63 அடி உயர தங்கக் கொடிமரத்தில் மிதுன லக்னத்தில் புனிதக் கொடியேற்றம் வெகு விமரிசையாக நடைபெற்றது.
வேத மந்திரங்கள் முழங்க, சிவாச்சாரியார்கள் மேளதாளங்களுடன் சிறப்பு பூஜைகளை நடத்தி கொடியேற்றினர். இந்த புனித நிகழ்வைக் காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் இன்று அதிகாலை முதலே திருக்கோயிலில் குவிந்தனர்.
பத்து நாட்கள் நடைபெறும் இந்த பிரம்மோற்சவத்தின் ஒரு பகுதியாக, தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் உற்சவ மூர்த்திகளான சந்திரசேகரர், விநாயகப் பெருமான் ஆகியோர் உண்ணாமுலையம்மனுடன் தனித்தனி வாகனங்களில் எழுந்தருளி திருவீதி உலா வருகின்றனர்.
ஒவ்வொரு நாளும் வெவ்வேறு வாகனங்களில், சிறப்பு மலர் அலங்காரத்தில் அருள்பாலிக்கும் சுவாமிகள், கோயிலைச் சுற்றியுள்ள நான்கு மாட வீதிகளிலும் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்காட்சி அளிப்பர்.
ஆனி பிரம்மோற்சவத்தை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் திருவண்ணாமலையில் குவிந்துள்ளனர்.
கோயில் வளாகம் முழுவதும் பக்தி பரவசத்துடன் அண்ணாமலையாருக்கு அரோகரா என்ற கோஷம் எதிரொலித்தது. விழாவை முன்னிட்டு கோயில் நிர்வாகம் சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
தினசரி நடைபெறும் சிறப்பு அபிஷேகங்கள், தீபாராதனைகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் பக்தர்களை பெரிதும் கவர்ந்துள்ளன.
விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் வரும் நாட்களில் நடைபெற உள்ளது.
Hindusthan Samachar / vidya.b