Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 08 ஜூலை (ஹி.ச.)
தூத்துக்குடி மாவட்ட உழவர் சந்தையானது விவசாயிகளுக்கும், நுகர்வோருக்கும் இடையே ஒரு நேரடி இணைப்பாகச் செயல்பட்டு வருகிறது.
இதன் அடுத்த கட்டமாக, சந்தையில் உள்ள விவசாயிகள், மகளிர் சுயஉதவிக் குழுக்கள் (SHGs), உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் (FPOs), இளைஞர்கள், தொழில்முனைவோர் மற்றும் சிறு வியாபாரிகள் தங்களது காய்கறிகள், பழங்கள் உள்ளிட்ட விவசாய விளைபொருட்களைப் பொதுமக்களின் வீட்டு வாசலுக்கே கொண்டு சென்று நேரடியாக விற்பனை செய்ய இத்திட்டம் வழிவகை செய்கிறது.
இந்த இ-லோடு ஆட்டோக்கள் மூலம் உற்பத்தியாளர்கள் தங்களது விளைபொருட்களைக் கிராமங்களில் இருந்து உழவர் சந்தைக்குக் கொண்டு வருவதுடன், குடியிருப்புப் பகுதிகள், அலுவலகங்கள், பள்ளிகள், மருத்துவமனைகள் மற்றும் வணிக வளாகங்கள் போன்ற மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு நேரடியாகச் சென்று விற்பனை செய்ய முடியும்.
இத்திட்டத்தின் மூலம் இடைத்தரகர்களின் தலையீடு முழுமையாகக் குறைக்கப்பட்டு, விவசாயிகளுக்குக் கூடுதல் வருமானம் நேரடியாகக் கிடைக்கும். அதே வேளையில், பொதுமக்களும் பசுமையான, தரமான காய்கறிகள் மற்றும் பழங்களை நியாயமான விலையில் நேரடியாகப் பெற்றுக் கொள்ளும் வாய்ப்பு உருவாகியுள்ளது.
இது விவசாயிகளின் சந்தைப்படுத்துதல் செலவைக் குறைத்து, உள்ளூர் பொருளாதார வளர்ச்சிக்கும் அவர்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்கும் முக்கியப் பங்களிப்பை வழங்கும்.
‘நடமாடும் உழவர் சந்தை’ திட்டத்தின் கீழ் இயக்கப்படும் இந்த இ-ஆட்டோக்களுக்கு, ஒரு நாளைக்கு ₹100 வீதம் தற்சமயம் வாடகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்த மேலும் விவரங்களுக்கு, தூத்துக்குடி உழவர் சந்தை நிர்வாக அலுவலர் அ.செல்வகுமாரை (தொடர்பு எண்: 9488102018) தொடர்பு கொள்ளலாம் என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / vidya.b