Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 08 ஜூலை (ஹி.ச.)
ஊரக வளர்ச்சித் துறையின் கீழ் செயல்படுத்தப்படும் அனைத்து நலத்திட்டங்களும் தகுதியான பயனாளிகளுக்கு முழுமையாக சென்றடைவதை உறுதி செய்ய அதிகாரிகளுக்கு முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.
முதலமைச்சர் தலைமையில் நடைபெற்ற ஊரக வளர்ச்சித் துறை ஆய்வுக் கூட்டத்தில், அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
சில தகுதியான பயனாளிகளுக்கு திட்டங்களின் பலன் சென்றடைவதில்லை என்ற புகார்கள் வருவதாகக் கூறிய முதலமைச்சர், இதுபோன்ற குறைபாடுகளை தவிர்க்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க அறிவுறுத்தினார்.
மேலும், திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து அதிகாரிகள் அவ்வப்போது ஆய்வு மேற்கொண்டு, தகுதியான அனைவரும் பயனடைவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
குறிப்பாக, பிரதம மந்திரி ஊரக குடியிருப்பு திட்டம், முதல்வரின் வீடு கட்டும் திட்டம், வீடு தோறும் சுகாதாரமான கழிவறை அமைக்கும் திட்டம், வீடு தோறும் குடிநீர் இணைப்பு திட்டம் உள்ளிட்ட மக்கள் நலத் திட்டங்கள் முழுமையாக செயல்படுத்தப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டது.
அத்துடன், ஊரக சாலை மேம்பாடு, சாலை சீரமைப்பு பணிகள், பாலங்கள் கட்டுவதற்கான மாநில சிறப்பு நிதி உதவி, பள்ளிகளின் அடிப்படை உட்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகள் உள்ளிட்ட திட்டங்களையும் விரைந்து நிறைவேற்ற அதிகாரிகளுக்கு முதலமைச்சர் அறிவுறுத்தினார்.
Hindusthan Samachar / VINOTH KUMAR P