Enter your Email Address to subscribe to our newsletters

வயநாடு, 08 ஜூலை (ஹி.ச.)
கேரள மாநிலம் வயநாடு அருகே மேப்பாடி கிராம பஞ்சாயத்தில் உள்ள கல்லடி சுரங்கப்பாதை கட்டுமானப் பகுதியில் நேற்று காலை 11:15 மணியளவில் நிலச்சரிவு ஏற்பட்டது.
இதில் 3 பேர் உயிரிழந்தனர், 5 தொழிலாளர்கள் காணாமல் போயினர்.
இன்று மீட்புப் பணிகள் இரண்டாவது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
நிலச்சரிவால் கட்டுமானப் பகுதியின் கணிசமான பகுதி சுமார் 7 முதல் 10 அடி உயர சேறு மற்றும் இடிபாடுகளுக்குள் புதைந்தது.
சிக்கியுள்ளவர்களைக் கண்டறிய NDRF, SDRF, சிவில் பாதுகாப்புப் பணியாளர்கள், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி சேவைகள், காவல்துறை குழுக்கள், மோப்ப நாய்கள் மற்றும் சடல மோப்ப நாய்கள் அதிகாரிகளால் களமிறக்கப்பட்டுள்ளன.
சேற்றுச் சரிவால் அடைபட்ட சாலைகளை சீரமைத்த பிறகு, இன்று அதிகாலை சம்பவ இடத்திற்கான சாலை இணைப்பு முழுமையாக மீட்டெடுக்கப்பட்டது.
இதன் மூலம் கனரக இயந்திரங்கள் மற்றும் மீட்பு உபகரணங்கள் அப்பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டன.
இந்த சம்பவம் குறித்து இரண்டு தனித்தனி விசாரணைகளுக்கு முதலமைச்சர் சதீசன் உத்தரவிட்டுள்ளார்.
ஒரு விசாரணை நிலச்சரிவுக்கு வழிவகுத்த காரணங்களை ஆராயும், மற்றொன்று, சுரங்கப்பாதை கட்டுமானத் திட்டத்திற்கான சுற்றுச்சூழல் அனுமதி நிபந்தனைகள் பின்பற்றப்பட்டதா என்பதை ஆய்வு செய்யும்.
இந்த நிலையில் கேரள முதலமைச்சர் வி.டி. சதீசன் வயநாடு நிலச்சரிவு நடந்த இடத்தை பார்வையிட உள்ளார்.
காணாமல் போன 5 தொழிலாளர்களைத் தேடும் மீட்புப் பணிகள் மோசமான வானிலைக்கு மத்தியில் தொடர்வதாக, கேரள வருவாய்த்துறை அமைச்சர் ஏ.பி. அனில் குமார் இன்று தெரிவித்தார்.
செய்தியாளர்களிடம் பேசிய அனில் குமார் கூறுகையில்,
தீவிர தேடுதல் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும், சாதகமற்ற வானிலையே மீட்புக் குழுக்களுக்கு முக்கிய சவாலாக உள்ளது. மீட்புப் பணிகள் தொடர்கின்றன. மாநில பேரிடர் மீட்புப் படை (SDRF) மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF) குழுக்கள் மிகவும் தீவிரமாக தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளன. முதலமைச்சரும் இங்கு வருகை தர உள்ளார் என்று கூறினார்.
மீட்புக் குழுக்களின் செயல்பாடுகள் குறித்து கேரள அமைச்சர் டி. சித்திக் கூறுகையில்,
மொத்த பகுதியையும் நான்கு மண்டலங்களாகப் பிரித்துள்ளோம். தேடுதல் பணி முழுவீச்சில் நடைபெறுகிறது. காணாமல் போனவர்களில் பெரும்பாலானோர் மண்டலம் 1 மற்றும் 3-ல் இருக்கலாம் என சந்தேகிக்கிறோம். NDRF மற்றும் சிவில் பாதுகாப்புக் குழுக்கள் பணியில் ஈடுபட்டுள்ளன என்றார் சித்திக்.
மாவட்ட ஆட்சியர் மேகஸ்ரீ கூறுகையில், இன்றும் தேடுதல் மற்றும் மீட்புப் பணியைத் தொடர்கிறோம். இதை நான்கு மண்டலங்களாகப் பிரித்துள்ளோம். போதுமான ஆட்கள், உபகரணங்கள், மோப்ப நாய்கள் எங்களிடம் உள்ளன. காணாமல் போன 5 நபர்களைக் கண்டுபிடிப்பதும், போக்குவரத்தை மீண்டும் சீரமைப்பதுமே எங்கள் நோக்கம். போதுமான பலத்துடன் பணியைத் தொடர்வோம்.
இன்றுவரை 3 உடல்களை மீட்டுள்ளோம். காலை முதல் எதுவும் கிடைக்கவில்லை. ஆனால் தேடுதல் முழுவீச்சில் நடக்கிறது.
5 பேர் காணவில்லை, 3 பேர் இறந்துள்ளனர். ஒருவர் ஐ.சி.யு-வில் உள்ளார், ஆனால் சீராக உள்ளார். அனைவரும் நலமாக உள்ளனர்
இவ்வாறு அவர் கூறினார்.
Hindusthan Samachar / vidya.b