சிங்கப்பூரில் இருந்து எம்.எல்.ஏ-விடம் பேரம் பேசியது யார்? - தனிப்படை போலீசார் தீவிர விசாரணை
சென்னை, 08 ஜூலை (ஹி.ச.) எம்.எல்.ஏ-விடம் பேரம் பேசியதாகக் கூறப்படும் பரபரப்பான வழக்கில் விசாரணை தீவிரமடைந்துள்ளது. இந்த வழக்கில் இதுவரை 9 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக் குமார் ஆகி
Sen


சென்னை, 08 ஜூலை (ஹி.ச.)

எம்.எல்.ஏ-விடம் பேரம் பேசியதாகக் கூறப்படும் பரபரப்பான வழக்கில் விசாரணை தீவிரமடைந்துள்ளது.

இந்த வழக்கில் இதுவரை 9 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக் குமார் ஆகியோரை போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.

இதற்கிடையில், செந்தில் பாலாஜி மற்றும் அசோக் குமார் இருவரும் முன்ஜாமீன் கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

மேலும், இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள திருநாவுக்கரசு, செல்வன், சீனிவாசன், ராஜேஷ், ரமேஷ் மற்றும் கார்த்திக் ஆகியோரை காவலில் எடுத்து விசாரிக்க திருவல்லிக்கேணி காவல் நிலையம் போலீசார் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

இந்த மனு மீதான உத்தரவு இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விசாரணையில் முக்கிய திருப்பமாக, காவலில் எடுக்கப்பட உள்ளவர்களில் ஒருவரிடம் சிங்கப்பூரில் இருந்து மர்ம நபர் ஒருவர் தொடர்பு கொண்டு பேசியிருப்பது போலீசாரின் கவனத்திற்கு வந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அந்த நபர் யார்? எந்த நோக்கத்திற்காக தொடர்பு கொண்டார்? என்பது குறித்து தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

போலீஸ் காவலில் விசாரணை நடத்தப்பட்ட பிறகு, இந்த வழக்கில் அரசியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த புதிய தகவல்கள் வெளியாகக்கூடும் என்ற தகவல்கள் பரவி வருகின்றன.

இருப்பினும், இதுபோன்ற தகவல்கள் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை.

விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Hindusthan Samachar / P YUVARAJ