Enter your Email Address to subscribe to our newsletters

திருவள்ளூர், 08 ஜூலை (ஹி.ச.)
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே உள்ள தமிழக - ஆந்திர எல்லையான எளாவூர் பகுதியில் ஒருங்கிணைந்த சோதனைச் சாவடி செயல்பட்டு வருகிறது.
இந்த சோதனைச்சாவடியில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் இன்று காலை அதிரடி சோதனை நடத்தினர்.
திருவள்ளூர் லஞ்ச ஒழிப்புத்துறை துணை கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தலைமையிலான குழுவினர், இந்த சோதனைச்சாவடிக்கு திடீரென வருகை தந்து சோதனையை மேற்கொண்டனர்.
எல்லைப்பகுதி சோதனைச்சாவடிகளில் வாகன ஓட்டிகளிடம் இருந்து சட்டவிரோதமாக பணம் வசூலிக்கப்படுவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்து வந்த நிலையில், இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
சோதனையின் போது, சோதனைச்சாவடியில் பணியில் இருந்த அலுவலர்களிடம் விசாரணை நடத்தப்பட்டதுடன், ஆவணங்களும் சரிபார்க்கப்பட்டன. கணக்கில் வராத பணம் ஏதேனும் கைப்பற்றப்பட்டதா என்பது குறித்த விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை.
தமிழக - ஆந்திர மாநிலங்களுக்கு இடையேயான முக்கிய போக்குவரத்து வழித்தடத்தில் அமைந்துள்ள எளாவூர் சோதனைச்சாவடியில் நடைபெற்ற இந்த திடீர் சோதனை, அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
லஞ்ச ஒழிப்புத்துறையினரின் தொடர் நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
Hindusthan Samachar / vidya.b