Enter your Email Address to subscribe to our newsletters

ஈரான், 08 ஜூலை (ஹி.ச)
ஈரான் ஹோர்முஸ் நீரிணையில் வணிக எண்ணெய் கப்பல்கள் மீது நடத்திய தாக்குதல்களுக்கு பதிலடியாக, அமெரிக்க ராணுவம் மீண்டும் ஈரான் மீது வலுவான தாக்குதல்களைத் தொடங்கியுள்ளது.
அறிவிக்கப்பட்ட கடல் வழித்தடத்தை மீறி பயணித்த வெளிநாட்டு வணிகக் கப்பல்கள் மீது ஈரான் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தியதாக அமெரிக்க மத்திய கட்டளைப்படை தெரிவித்துள்ளது.
இந்த தாக்குதல்களில் குறைந்தது மூன்று எண்ணெய் கப்பல்கள் சேதமடைந்தன. கத்தாரின் எல்என்ஜி கப்பலான ‘அல் ரெக்காயத்’ ட்ரோன் தாக்குதலில் தீப்பிடித்ததாகவும், சவுதி கொடி கொண்ட சூப்பர் டேங்கர் ‘வெட்யான்’ ஓமான் அருகே சேதமடைந்ததாகவும் கடல்சார் பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்தன.
இதைத் தொடர்ந்து, அமெரிக்கா ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல் படையின் 60-க்கும் மேற்பட்ட சிறிய படகுகள், வான் பாதுகாப்பு அமைப்புகள், கப்பல் எதிர்ப்பு ஏவுகணைத் தளங்கள், ட்ரோன் ஏவுதளங்கள் மற்றும் கடற்கரை கண்காணிப்பு அமைப்புகள் என 80-க்கும் மேற்பட்ட இலக்குகளை குறிவைத்து தாக்கியது.
பண்டார் அப்பாஸ், சிரிக், கேஷ்ம் தீவு மற்றும் ஈரானின் முக்கிய எண்ணெய் மையமான கார்க் தீவு ஆகிய பகுதிகளில் வெடிச்சத்தங்கள் கேட்டதாக ஈரானிய அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
சிரிக் நகரில் வணிக துறைமுகம் ஒன்றில் எதிரியின் எறிகணை தாக்கியதில் பலர் காயமடைந்ததாகவும், மீன்பிடி படகுகள் தீப்பற்றி எரிந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த தாக்குதல்கள் போர்நிறுத்தத்தை தெளிவாக மீறும் நியாயமற்ற ஆபத்தான நடவடிக்கை என்றும், கப்பல் போக்குவரத்து சுதந்திரத்தை குலைக்கும் செயல் என்றும் அமெரிக்க மத்திய கட்டளைப்படை கண்டனம் தெரிவித்தது.
அமெரிக்காவின் இந்த பதில் தாக்குதல், ஈரானின் வணிகக் கப்பல்கள் மீதான தாக்குதலுக்கு கடும் விலை கொடுக்க வைக்கும் நோக்கில் நடத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, ஈரான் வெளியுறவு அமைச்சகம் அமெரிக்காவின் தாக்குதல்களையும், ஈரான் எண்ணெய் விற்பனைக்கு விதிக்கப்பட்ட தற்காலிக தடை நீக்கத்தை அமெரிக்கா ரத்து செய்ததையும் கடுமையாகக் கண்டித்துள்ளது.
இது புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அப்பட்டமான மீறல் என்று கூறி, தனது நலன்களைப் பாதுகாக்க உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளது.
இந்த மோதலால் உலகளாவிய எண்ணெய் விலை சுமார் 3% உயர்ந்துள்ளது, மேலும் ஹோர்முஸ் நீரிணை வழியாக செல்லும் கப்பல் போக்குவரத்து குறித்த அச்சம் மீண்டும் அதிகரித்துள்ளது.
Hindusthan Samachar / vidya.b