Enter your Email Address to subscribe to our newsletters

பனகானப்பள்ளி , 09 ஜூலை (ஹி.ச.)
ஆந்திர மாநிலம்,நந்தியால் மாவட்டம் பனகானப்பள்ளியில் நடைபெற்ற ‘உங்கள் நிலம்-உங்கள் உரிமை’ திட்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சந்திரபாபு நாயுடு, விவசாயிகளுக்கு புதிய பட்டாதார் பாஸ்புக்குகளை வழங்கினார்.
பின்னர் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது:-
ஆந்திர மாநிலத்தில் நிலத் தகராறுகளுக்கு நிரந்தர தீர்வு காணப்பட்டு, மாநிலத்தை நிலத் தகராறற்ற மாநிலமாக உருவாக்குவதே கூட்டணி அரசின் இலக்கு என்று முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு தெரிவித்தார்.
கடந்த ஆட்சியில் கொண்டுவரப்பட்ட நில உரிமை சட்டம் (Land Titling Act) பொதுமக்களின் சொத்துகளுக்கு பாதுகாப்பற்ற சூழலை ஏற்படுத்தும் வகையில் இருந்தது. ஆட்சிக்கு வந்தவுடன் அந்த சட்டத்தை ரத்து செய்வோம் என்று அளித்த வாக்குறுதியை நிறைவேற்றியுள்ளோம்.
கடந்த ஆட்சியில் சிலரது நிலங்கள் 22-ஏ பட்டியலில் சேர்க்கப்பட்டு, பல்வேறு பிரச்சினைகள் உருவாக்கப்பட்டன.
தற்போது அந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட்டு, மக்களின் நில உரிமையை பாதுகாக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
மாநில அரசின் முத்திரை மற்றும் நவீன பாதுகாப்பு அம்சங்களுடன் புதிய பட்டாதார் பாஸ்புக்குகள் வழங்கப்படுகின்றன.
2027-ம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் ஆந்திர மாநிலத்தில் உள்ள 9,833 கிராமங்களில் 72 லட்சத்து 70 ஆயிரத்து 605 பட்டாதார் பாஸ்புக்குகள் வழங்கப்படும்.
வாரிசு சொத்துகளை எளிதாக மாற்றிக் கொள்ளும் வகையில் ஆட்டோ மியூட்டேஷன் நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது.
டோன் சட்டமன்ற தொகுதியில் 2,074 ஏக்கர் வக்பு நிலங்கள் 22-ஏ பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு விவசாயிகளுக்கு நியாயம் வழங்கப்பட்டுள்ளது.
ராயலசீமை பகுதியின் வளர்ச்சிக்கு அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது.
கடப்பா எஃகு ஆலை, ஹீரோ மோட்டார்ஸ் நிறுவனம் மற்றும் பாதுகாப்பு துறைக்கான AMCA போர் விமான தயாரிப்பு திட்டம் உள்ளிட்ட பெரிய தொழில் திட்டங்கள் இந்த பகுதியில் தொடங்கப்பட உள்ளன.
அரசு மற்றும் தனியார் முதலீடுகள் மூலம் ரூ.1 லட்சம் கோடி அளவிலான முதலீடுகளை ஈர்த்து, ராயலசீமையை தோட்டக்கலை மையமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.
இந்த ஆண்டு எல் நினோ தாக்கத்தால் மாநிலத்தில் மழைப்பொழிவு 22 சதவீதம் குறைந்துள்ளது. இதனை கருத்தில் கொண்டு நீர் பாதுகாப்புக்காக ‘ஜலதாரா’ திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. மழைநீரை சேமித்து நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துவதே இதன் நோக்கமாகும்.
இதற்காக 18 கிலோமீட்டர் நீள கால்வாய் மற்றும் தடுப்பணைகள் அமைத்த நந்தியால் மாவட்ட நிர்வாகத்தின் பணிகளை முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு பாராட்டினார்.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA