Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 09 ஜூலை (ஹி.ச.)
கர்நாடக அரசு, காவிரி மேலாண்மை ஆணையத்தின் வழிகாட்டுதல்களை மதித்து, தமிழகத்திற்கு உரிய காவிரி நீரை திறந்துவிட வேண்டும் என்றும், தமிழக அரசு இதற்கான நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என்றும் திமுக துணைப் பொதுச் செயலாளரும் மக்களவை உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பதிவில்,
ஜூன் மாதத்திற்கு 9.91 டி.எம்.சி. மற்றும் ஜூலை மாதத்திற்கு 32 டி.எம்.சி. காவிரி நீரை தமிழ்நாட்டிற்கு திறந்துவிட வேண்டும் என்று காவிரி நீர் மேலாண்மை ஆணையம் வழிகாட்டியுள்ள நிலையில், தமிழ்நாட்டிற்கு தண்ணீர் வழங்க முடியாது என்று கர்நாடகா நீர்ப்பாசனத்துறை அமைச்சர் தெரிவித்திருப்பது ஏற்க முடியாதது என்று கூறியுள்ளார்.
மேலும், குறுவை சாகுபடியைத் தொடங்க முடியாமல் டெல்டா மாவட்ட விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ள நிலையில், தமிழக அரசும், அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியும் இந்த விவகாரத்தில் பொறுப்புடன் செயல்பட்டு, தமிழ்நாட்டிற்கான காவிரி நீர் பங்கீட்டை பெற்றுத்தருவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் கனிமொழி வலியுறுத்தியுள்ளார்.
Hindusthan Samachar / GOKILA arumugam