Enter your Email Address to subscribe to our newsletters

ஹைதராபாத், 09 ஜூலை (ஹி.ச.)
பி.ஆர்.எஸ். கட்சியின் வங்கிக் கணக்கில் உள்ள ரூ.1,400 கோடி நிதி குறித்து முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என்று தெலங்கானா ரக்ஷண சேனா தலைவர் கவிதா வலியுறுத்தியுள்ளார்.
சிங்கரேணி நிலக்கரி நிறுவனத்தை பாதுகாக்கவும், தொழிலாளர்களின் உரிமைகளை வலியுறுத்தவும் மேற்கொள்ளப்பட்டுள்ள 'சிங்கரேணி பாய் பாத்' நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர்,
பி.ஆர்.எஸ். கட்சியின் வங்கிக் கணக்கில் உள்ள ரூ.1,400 கோடி நிதி தூய்மையானது அல்ல என்றும், அந்தப் பணம் 'க்விட் ப்ரோ கோ' (Quid Pro Quo) முறையில் பெறப்பட்டதாகவும் குற்றம்சாட்டினார்.
இந்த நிதி குறித்து விரிவான விசாரணை நடத்தி, முறைகேடுகள் உறுதியானால் அந்தப் பணத்தை தெலங்கானா போராட்ட வீரர்களின் குடும்பங்களுக்கு வழங்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார். மேலும், உயிர் உள்ளவரை மீண்டும் பி.ஆர்.எஸ். கட்சியில் இணைய மாட்டேன் என்றும் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், அரசின் தவறான கொள்கைகள் மற்றும் நிலுவைத் தொகைகள் வழங்கப்படாததால் சிங்கரேணி நிறுவனம் கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளதாக கூறினார்.
இதன் காரணமாக தொழிலாளர்களுக்கு தேவையான சுரங்க உபகரணங்களைக் கூட வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும், அதிகாரிகளுக்கு ஒரு விதியும், தொழிலாளர்களுக்கு வேறு விதியும் நிர்வாகம் கடைப்பிடிப்பதாகவும் குற்றம்சாட்டினார்.
மேலும், மத்திய அரசின் கொள்கைகளால் தெலங்கானாவுக்கான நிலக்கரி சுரங்கத் தொகுதிகள் தனியாருக்கு ஒப்படைக்கப்படுவதாகவும் அவர் விமர்சித்தார்.
தெலங்கானா மாநிலம் உருவாகும் முன்பு சிங்கரேணியில் 62 ஆயிரம் நிரந்தர தொழிலாளர்கள் பணியாற்றிய நிலையில், தற்போது அந்த எண்ணிக்கை 38 ஆயிரமாகக் குறைந்துள்ளதாக குறிப்பிட்ட அவர், ஒப்பந்த மற்றும் நிரந்தர தொழிலாளர்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்றார்.
தொழிலாளர்களின் வாரிசுகளுக்கான பணியமர்த்தலுக்காக மாதத்திற்கு குறைந்தது 2 முறை மருத்துவக் குழு கூட்டப்பட வேண்டும் என்றும், இந்த விவகாரத்தில் அரசு மற்றும் சிங்கரேணி நிர்வாகம் விரைவில் தெளிவான முடிவை அறிவிக்காவிட்டால், இந்த மாதம் 20-ந் தேதி முதல் ராமகுண்டத்தில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் என்றும் கவிதா எச்சரித்தார்.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA