Enter your Email Address to subscribe to our newsletters

தமிழ்நாடு, 01 ஆகஸ்ட் (ஹி.ச.)
காவிரி நீர் விவகாரத்தில் கர்நாடக அரசுக்கு அழுத்தம் கொடுத்து தமிழகத்திற்கான உரிய நீரை பெற்றுத்தர வேண்டும்,இல்லையெனில் தமிழகத்தைச் சேர்ந்த காங்கிரஸ் அமைச்சர்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று புரட்சி பாரதம் கட்சித் தலைவர் ஜெகன் மூர்த்தி வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக சமூக வலைதளமான எக்ஸில் அவர் வெளியிட்ட பதிவில்,
காவிரி ஆறு தமிழகத்தின் உயிர்நாடி என்றும், கோடிக்கணக்கான விவசாயிகளின் வாழ்வாதாரம் அதனைச் சார்ந்துள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
உச்சநீதிமன்றத் தீர்ப்பு மற்றும் காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுகளை மதிக்காமல், தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க மறுப்பதற்கு கர்நாடக அரசுக்கு எந்த சட்டப்பூர்வமான உரிமையும் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருவதையும், தமிழகத்தில் தவெக தலைமையிலான கூட்டணி அரசில் காங்கிரஸ் இடம்பெற்றிருப்பதையும் சுட்டிக்காட்டிய ஜெகன் மூர்த்தி, தமிழகத்தைச் சேர்ந்த காங்கிரஸ் அமைச்சர்கள் தங்கள் கட்சித் தலைமையின் மூலம் கர்நாடக அரசுக்கு உடனடியாக அழுத்தம் கொடுத்து, தமிழகத்திற்கான காவிரி நீரை திறந்துவிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
அவ்வாறு தமிழகத்தின் உரிமைக்காக தங்கள் கட்சியிடம் அழுத்தம் கொடுக்க முடியாவிட்டால், தமிழகத்தைச் சேர்ந்த காங்கிரஸ் அமைச்சர்கள் உடனடியாக பதவி விலக வேண்டும் என்றும், பதவியை விட தமிழக மக்களின் உரிமையும் விவசாயிகளின் வாழ்வாதாரமுமே முக்கியம் என்றும் ஜெகன் மூர்த்தி தனது பதிவில் தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / VINOTH KUMAR P