Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 01 ஆகஸ்ட் (ஹி.ச.)
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, ஒருநாள் பயணமாக இன்று (ஆகஸ்ட் 01) காலை சென்னை வந்தடைந்தார்.
சென்னை விமான நிலையத்தில் அவருக்குத் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உற்சாகமான வரவேற்பு அளித்தனர்.
மாமல்லபுரம் கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள தனியார் விடுதியில், கடந்த 10 நாட்களாகக் காங்கிரஸ் மாவட்டத் தலைவர்களுக்கான சிறப்புப் பயிற்சி முகாம் நடைபெற்று வருகிறது.
இன்று மாலை நடைபெறும் இதன் நிறைவு விழாவில் பங்கேற்று ராகுல் காந்தி உரையாற்றுகிறார்.
நாடாளுமன்ற மற்றும் வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தல்களை எதிர்கொள்வது, கிராமப்புற மற்றும் வாக்குச்சாவடி (Booth level) வாரியாகக் காங்கிரஸை வலுப்படுத்துவது குறித்து 74 மாவட்டத் தலைவர்களுடன் அவர் ஆலோசிக்க உள்ளார்.
தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி 59 ஆண்டுகளுக்குப் பிறகு மாநில அமைச்சரவையில் பங்கேற்றுள்ள சூழலில், இந்த வருகை அரசியல் வட்டாரத்தில் பெரும் உற்று நோக்கலை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யை ராகுல் காந்தி சந்தித்துப் பேச வாய்ப்புள்ளதாகப் பரவலாகத் தகவல்கள் வெளியாயின.
அதே போன்று, கோவை மற்றும் சேலம் பகுதிகளில் நீட் தேர்வால் பலியான 4 மாணவ-மாணவிகளின் பெற்றோரை சந்திப்பதற்கான ஏற்பாடுகளும் நடைபெற்று வருகின்றன.
பின்னர் சென்னை வந்து இரவு 7 மணிக்கு விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு செல்கிறார்.
ராகுல் காந்தி வருகையை முன்னிட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
Hindusthan Samachar / vidya.b