Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 01 ஆகஸ்ட் (ஹி.ச)
பிரதான் மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் குறுவை சாகுபடி செய்துள்ள விவசாயிகள் தங்கள் பயிர்களை காப்பீடு செய்ய ஜூலை 31-ம் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் பெய்த கனமழை மற்றும் இணையதள சேவையில் ஏற்பட்ட தொய்வு காரணமாக பல விவசாயிகளால் உரிய நேரத்தில் காப்பீடு செய்ய முடியவில்லை என புகார்கள் எழுந்தன.
இதையடுத்து விவசாயிகள் நலன் கருதி காப்பீடு செய்வதற்கான காலக்கெடுவை இன்று ஆகஸ்ட் 1-ம் தேதி வரை ஒரு நாள் நீட்டித்து வேளாண்மைத் துறை உத்தரவிட்டுள்ளது.
எனவே, இதுவரை பயிர் காப்பீடு செய்யாத குறுவை விவசாயிகள் இன்று மாலைக்குள் தங்களது அருகில் உள்ள பொது சேவை மையங்கள், வங்கிகள் அல்லது வேளாண்மை விரிவாக்க மையங்களை அணுகி பயிர் காப்பீடு செய்து பயன்பெறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இயற்கை சீற்றங்கள், பருவமழை பொய்ப்பு மற்றும் பூச்சி தாக்குதல் போன்ற இடர்பாடுகளால் பயிர்கள் சேதமடையும் பட்சத்தில் இந்த காப்பீட்டுத் திட்டம் விவசாயிகளுக்கு பெரும் பாதுகாப்பாக அமையும் என்பதால், இந்த கடைசி வாய்ப்பை அனைத்து குறுவை விவசாயிகளும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
Hindusthan Samachar / vidya.b