2026–27 வேளாண் தனி நிதிநிலை அறிக்கை தாக்கலுக்கு முன்னதாக திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வழிபாடு செய்த வேளாண் அமைச்சர் வினோத்
சென்னை, 01 ஆகஸ்ட் (ஹி.ச) தமிழ்நாடு அரசின் 2026–27ஆம் ஆண்டிற்கான வேளாண் தனி நிதிநிலை அறிக்கை விரைவில் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், அதன் வரைவு அறிக்கையுடன் தமிழ்நாடு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் வினோத், இன்று திருப்பத
Vini


சென்னை, 01 ஆகஸ்ட் (ஹி.ச)

தமிழ்நாடு அரசின் 2026–27ஆம் ஆண்டிற்கான வேளாண் தனி நிதிநிலை அறிக்கை விரைவில் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், அதன் வரைவு அறிக்கையுடன் தமிழ்நாடு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் வினோத், இன்று திருப்பதி ஏழுமலையான் திருக்கோவிலில் சுவாமி தரிசனம் செய்து சிறப்பு வழிபாடு மேற்கொண்டார்.

தமிழ்நாடு முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசில் நடைபெறவுள்ள முதல் பட்ஜெட் கூட்டத்தொடர் என்பதால், இந்த ஆண்டு தாக்கல் செய்யப்படும் வேளாண் தனி நிதிநிலை அறிக்கை முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

அந்த அறிக்கையின் வரைவு பிரதியை உடன் எடுத்துச் சென்று, விவசாயிகளின் நலன், வேளாண் வளர்ச்சி மற்றும் மாநிலத்தின் வளமான விவசாய எதிர்காலத்திற்காக இறைவனின் அருளை வேண்டி அமைச்சர் வழிபட்டார்.

இந்த வழிபாட்டின் போது, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை உயரதிகாரிகள், கோவில் நிர்வாக அதிகாரிகள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர். கோவில் நிர்வாகம் சார்பில் அமைச்சருக்கு தீர்த்தம், பிரசாதம் மற்றும் வேத ஆசீர்வாதம் வழங்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

2026–27ஆம் ஆண்டிற்கான வேளாண் தனி நிதிநிலை அறிக்கையில், விவசாயிகளின் வருமானத்தை உயர்த்தும் புதிய திட்டங்கள், பாசன வசதிகளை மேம்படுத்தும் நடவடிக்கைகள், இயற்கை மற்றும் நவீன வேளாண்மையை ஊக்குவிக்கும் திட்டங்கள், பயிர்க் காப்பீடு, விதை மற்றும் உர மானியங்கள், தோட்டக்கலை, கால்நடை வளர்ச்சி, வேளாண் உள்கட்டமைப்பு மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு முக்கிய அறிவிப்புகள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படவுள்ள இந்த வேளாண் தனி நிதிநிலை அறிக்கை, மாநிலத்தின் விவசாயத் துறையின் எதிர்கால வளர்ச்சிக்கான முக்கிய ஆவணமாக இருக்கும் என அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதனை முன்னிட்டு அமைச்சர் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சுவாமி தரிசனம் செய்து வழிபட்டது குறிப்பிடத்தக்க நிகழ்வாக அமைந்துள்ளது.

Hindusthan Samachar / P YUVARAJ