தொழில்துறை கட்டிட அனுமதிக்கு சிறப்புப் பிரிவு - அனுமதி காலத்தை 15 நாட்களாக குறைக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை
தமிழ்நாடு, 01 ஆகஸ்ட் (ஹி.ச.) தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகளை ஊக்குவிக்கும் நோக்கில், தொழில்துறை கட்டிடங்களுக்கான அனுமதி விண்ணப்பங்களை விரைவாக பரிசீலிக்க தமிழ்நாடு நகர் மற்றும் ஊரமைப்பு இயக்ககம் (DTCP) புதிய சிறப்புப் பிரிவை அமைத்துள்ளது. சென்னை ப
தமிழ்நாடு அரசு


தமிழ்நாடு, 01 ஆகஸ்ட் (ஹி.ச.)

தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகளை ஊக்குவிக்கும் நோக்கில், தொழில்துறை கட்டிடங்களுக்கான அனுமதி விண்ணப்பங்களை விரைவாக பரிசீலிக்க தமிழ்நாடு நகர் மற்றும் ஊரமைப்பு இயக்ககம் (DTCP) புதிய சிறப்புப் பிரிவை அமைத்துள்ளது.

சென்னை பெருநகரப் பகுதியைத் தவிர்த்து, மாநிலத்தின் பிற பகுதிகளில் தொழில்துறை கட்டிட அனுமதி வழங்கும் பணிகளை விரைவுபடுத்தும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கர்நாடகா, தெலங்கானா, ஆந்திரப் பிரதேசம் உள்ளிட்ட அண்டை மாநிலங்களுக்கு புதிய தொழில் முதலீடுகள் செல்வதாக எழுந்த குற்றச்சாட்டுகளின் பின்னணியில் இந்த நடவடிக்கை முக்கியத்துவம் பெற்றுள்ளது.

நகர் மற்றும் ஊரமைப்பு இயக்கக ஆணையர் கிரண் குராலா உத்தரவின் பேரில் அமைக்கப்பட்டுள்ள இந்த சிறப்புப் பிரிவு, 40,000 சதுர அடிக்கு மேல் மற்றும் 2 லட்சம் சதுர அடிக்கு உட்பட்ட பரப்பளவு கொண்ட தொழில்துறை கட்டிடங்களுக்கான அனுமதி விண்ணப்பங்களை பரிசீலிக்கும்.

DTCP இணை இயக்குநர் சிவப்பிரகாசம் தலைமையில் செயல்படும் இந்தப் பிரிவில், பல்வேறு நிலைகளில் உள்ள ஐந்து அதிகாரிகள் இடம்பெறவுள்ளனர்.

இந்த பிரிவு, திட்டமிடல் அதிகார மையத்தின் தலைமையகத்தில் இருந்து செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது தொழில்துறை கட்டிட அனுமதி விண்ணப்பங்களை பரிசீலிக்க பொதுவாக 30 முதல் 45 நாட்கள் வரை ஆகும் நிலையில், புதிய சிறப்புப் பிரிவு மூலம் அந்த கால அளவை 15 நாட்களாகக் குறைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

மாநிலத்தில் முதலீடு செய்யும் நிறுவனங்களுக்கு விரைவான அனுமதி நடைமுறையை உறுதி செய்து, தொழில் நட்பு சூழலை உருவாக்கும் நோக்கிலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நகர் மற்றும் ஊரமைப்பு இயக்கக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

மேலும், பெரும்பாலான தொழில்துறை திட்டங்கள் 40,000 சதுர அடிக்கு மேல் பரப்பளவு கொண்டிருப்பதால், அவற்றின் அனுமதி செயல்முறையை துரிதப்படுத்த இந்த சிறப்புப் பிரிவு முக்கிய பங்காற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Hindusthan Samachar / GOKILA arumugam