Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 01 ஆகஸ்ட் (ஹி.ச.)
தென்னிந்திய திரையுலகின் மூத்த பின்னணிப் பாடகியும், கலைமாமணி விருதுபெற்றவருமான ஜமுனா ராணி மறைவுக்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
தென்னிந்திய திரையுலகில் தனித்துவமான இடத்தைப் பிடித்த பழம்பெரும் பின்னணிப் பாடகி ஜமுனா ராணி மறைந்த செய்தி மிகுந்த வேதனையையும் வருத்தத்தையும் அளிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடி, இசை ரசிகர்களின் இதயங்களில் நீங்கா இடம்பிடித்தவர் ஜமுனா ராணி என்றும், அவரது குரல் இசையுலகில் என்றும் நிலைத்திருக்கும் என்றும் புகழாரம் சூட்டியுள்ளார்.
மேலும், ஜமுனா ராணியை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் திரையுலகைச் சேர்ந்த அனைவருக்கும் தனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொண்டுள்ளார்.
அத்துடன், மறைந்த ஜமுனா ராணி அவர்களின் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திப்பதாக டிடிவி தினகரன் தனது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ