Enter your Email Address to subscribe to our newsletters

ராஜமுந்திரி , 10 ஆகஸ்ட் (ஹி.ச.)
ராஜமுந்திரியில் சமீபத்தில் நடந்த சாலை விபத்தில் படுகாயம் அடைந்த பி.ஜி. மருத்துவ மாணவி டாக்டர் பிரியங்கா, ஹைதராபாத்தில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் பரிதாபமாக உயிரிழந்தார்.
மதுபோதையில் சில இளைஞர்கள் அதிவேகமாகவும், அஜாக்கிரதையாகவும் காரை ஓட்டிச் சென்று மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த விபத்தில் பலத்த காயம் அடைந்த டாக்டர் பிரியங்கா, உயிருக்கு ஆபத்தான நிலையில் ஹைதராபாத் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
எதிர்காலத்தில் சிறந்த டாக்டராகி சமூகத்திற்கு சேவை செய்ய வேண்டிய இளம் மருத்துவ மாணவியின் அகால மரணம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
டாக்டர் பிரியங்காவின் மரணம் குறித்து ஆந்திர மாநில துணை முதல்-மந்திரி பவன் கல்யாண் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில்,
டாக்டர் பிரியங்கா உயிரிழந்த செய்தி என்னை மிகவும் வேதனைக்குள்ளாக்கியுள்ளது. ஒரு உயிரை பறித்த குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை கிடைக்கும் வகையில் கூட்டணி அரசு கடும் நடவடிக்கை எடுக்கும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், டாக்டர் பிரியங்காவின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்திப்பதாகவும், அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதாகவும் பவன் கல்யாண் கூறியுள்ளார்.
இந்த துயரமான நேரத்தில் பிரியங்காவின் குடும்பத்துக்கு கூட்டணி அரசு அனைத்து வகையிலும் துணை நிற்கும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.
விபத்துக்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் சட்டத்தின் பிடியில் இருந்து தப்ப முடியாது என்றும், அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து உரிய தண்டனை பெற்றுத்தர அரசு நடவடிக்கை எடுக்கும் என்றும் பவன் கல்யாண் உறுதி அளித்துள்ளார்.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA