Enter your Email Address to subscribe to our newsletters

தமிழ்நாடு, 10 ஆகஸ்ட் (ஹி.ச.)
கர்நாடக அணைகளில் இருந்து திறந்து விடப்படும் உபரி நீரின் அளவு மாற்றங்களுக்கு ஏற்ப, தமிழக எல்லைக்கு வரும் நீரின் அளவும் தொடர்ந்து மாறுபட்டு வருகிறது.
அந்த வகையில் காவிரி ஆற்றில் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு நீர்வரத்து கணிசமாக அதிகரித்துள்ளது.
கர்நாடக மாநிலத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக கர்நாடக அணைகளான கிருஷ்ணராஜ சாகர் மற்றும் கபினி அணைகளில் இருந்து திறந்துவிடப்படும் உபரி நீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக காவிரி ஆற்றில் பிலிகுண்டுலு பகுதிக்கு வந்து கொண்டிருந்த நீர்வரத்து வினாடிக்கு 5,000 கன அடியில் இருந்து 6,500 கன அடியாக உயர்ந்துள்ளது.
நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால், தமிழகத்தின் முக்கிய அணையான மேட்டூர் அணைக்கு வரும் நாட்களில் நீர்வரத்து மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் டெல்டா பாசன விவசாயிகள் மத்தியில் மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
ஒகேனக்கல் மற்றும் பிலிகுண்டுலு பகுதிகளில் நீர்வரத்து மாறுபடுவதால், சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் ஆற்றில் இறங்குவதைத் தவிர்க்குமாறு மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது.
Hindusthan Samachar / vidya.b