Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 10 ஆகஸ்ட் (ஹி.ச)
தமிழ்த்தாய் வாழ்த்து தொடர்பாக த.வெ.க. அரசு கொண்டு வந்துள்ள தீர்மானத்தை தி.மு.க. ஐ.டி. விங் கடுமையாக விமர்சித்துள்ளது.
தி.மு.க. ஆட்சிக்கு வந்த 2021ஆம் ஆண்டு அரசாணை எண் 1037, நாள் 17.12.2021 மூலம், தமிழ்நாட்டில் அமைந்துள்ள அனைத்து கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளிட்ட பொது அமைப்புகளின் நிகழ்ச்சிகளில், நிகழ்வு தொடங்குவதற்கு முன்பு தமிழ்த்தாய் வாழ்த்து கட்டாயம் பாடப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டதாக தி.மு.க. ஐ.டி. விங் தெரிவித்துள்ளது.
மேலும், தமிழ்த்தாய் வாழ்த்தை முதலில் பாடுவதுதான் தமிழ்நாட்டின் நெடுங்கால மரபு என்றும், அதனை மாநிலப் பாடலாக அறிவித்து அரசாணை வெளியிட்டதும் மு.க. ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அரசுதான் என்றும் குறிப்பிட்டுள்ளது.
ஆனால், அந்த மரபை பாதுகாக்கத் தெரியாமல் ஒன்றிய அரசுக்கும், ஆளுநருக்கும் அடிபணிந்து த.வெ.க. ஆட்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக இசைக்கப்பட்டதாக தி.மு.க. ஐ.டி. விங் குற்றம்சாட்டியுள்ளது.
இதற்கு கடும் எதிர்ப்புகள் எழுந்த நிலையில், கண்துடைப்புக்காகவே தமிழ்த்தாய் வாழ்த்து தொடர்பான தீர்மானத்தை த.வெ.க. அரசு கொண்டு வந்துள்ளதாகவும் விமர்சித்துள்ளது.
உண்மையிலேயே இந்த அரசுக்கு தைரியம் இருந்தால், தமிழ்நாட்டில் தமிழ்த்தாய் வாழ்த்தைத் தவிர வேறு எந்தப் பாடலையும் முதலில் பாட மாட்டோம் என்று தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்றும் தி.மு.க. ஐ.டி. விங் தனது எக்ஸ் தளப் பதிவில் வலியுறுத்தியுள்ளது.
Hindusthan Samachar / P YUVARAJ