Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 10 ஆகஸ்ட் (ஹிச.)
மாணவர் போராட்டங்கள் மற்றும் அவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட போலீஸ் நடவடிக்கைகள் குறித்து மக்களவையில் விவாதம் நடத்த மத்திய அரசு தயாராக இருப்பதாக நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.
மக்களவையின் அலுவல் ஆலோசனைக் குழு கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் போராட்டங்கள், போலீஸ் நடவடிக்கைகள் குறித்து விரிவான விவாதத்திற்கு அரசு தயாராக இருப்பதாக கூறினார்.
இந்த விவாதத்திற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அரசின் சார்பில் பதிலளிப்பார் என்றும் கிரண் ரிஜிஜு தெரிவித்தார்.
அதேநேரத்தில், எதிர்க்கட்சிகள் விவாதத்தில் அமைதியாக பங்கேற்று, உள்துறை அமைச்சரின் பதிலையும் அமைதியாக கேட்பதாக உறுதியளிக்க வேண்டும் என்றும், விவாதத்தின்போது அமளி மற்றும் முழக்கங்களில் ஈடுபட்டு நாடாளுமன்ற நடவடிக்கைகளை சீர்குலைக்கக் கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார்.
ஜூலை 20ஆம் தேதி தொடங்கிய நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகளின் தொடர் போராட்டம் காரணமாக அவைகள் பலமுறை ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
நீட் வினாத்தாள் கசிவு மற்றும் அயோத்தி ராமர் கோயில் காணிக்கை முறைகேடு உள்ளிட்ட விவகாரங்களை எழுப்பிய எதிர்க்கட்சிகள், மாணவர் போராட்டங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட போலீஸ் நடவடிக்கை குறித்தும் விவாதிக்க வலியுறுத்தி வருகின்றன.
மேலும், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா நாடாளுமன்றத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றன.
Hindusthan Samachar / VINOTH KUMAR P