Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 10 ஆகஸ்ட் (ஹி.ச)
தமிழக சட்டசபை இன்று காலை 9.30 மணிக்கு கூடியதும் மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மா.சுப்பிரமணியன் என்ற கோமுகி மணியன் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, அரசுத் துறை, கல்வி நிறுவன நிகழ்ச்சிகளில் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவதை கட்டாயமாக்கும் வகையில், சட்டசபையில் முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் தனித்தீர்மானம் கொண்டு வந்தார்.
சட்டப்பேரவையில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம் அளிக்கும் வகையில் கொண்டுவரப்பட்டுள்ள தனித்தீர்மானத்தை அனைத்து உறுப்பினர்களும் ஒருமனதாக ஆதரிக்க வேண்டும் என்று உயர் கல்வித் துறை அமைச்சர் விஸ்வநாதன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சட்டப்பேரவையில் இன்று நடைபெற்ற விவாதத்தில் பேசிய அவர், தமிழ்த்தாய் வாழ்த்து என்பது வெறும் பாடல் அல்ல, அது 8.5 கோடி தமிழர்களின் உணர்வு, அடையாளம் மற்றும் பண்பாட்டின் சின்னம் என்று குறிப்பிட்டார்.
முதலமைச்சர் விஜய் அவர்கள் கொண்டு வந்துள்ள இந்த தீர்மானம் கட்சி, அரசியலுக்கு அப்பாற்பட்டது என்றும், இது ஒட்டுமொத்த தமிழ் சமூகத்தின் ஒற்றுமையை பறைசாற்றும் தீர்மானம் என்றும் அமைச்சர் விஸ்வநாதன் தெரிவித்தார். முதலமைச்சர் கொண்டு வந்துள்ள இந்த தீர்மானத்தை 8.5 கோடி தமிழர்களும் மனதார ஏற்றுக்கொண்டு வரவேற்கிறார்கள் என்றும் அவர் கூறினார்.
எனவே தமிழ் மொழியின் பெருமையை உலகறியச் செய்யும் வகையிலும், தமிழ்த்தாய் வாழ்த்துக்கு உரிய முதலிடத்தை வழங்கும் வகையிலும் அமையும் இந்த தனித்தீர்மானத்தை ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என்ற பாகுபாடின்றி அனைவரும் ஆதரிக்க வேண்டும் என்று அவர் உருக்கமாக வேண்டுகோள் விடுத்தார்.
Hindusthan Samachar / vidya.b