Enter your Email Address to subscribe to our newsletters

மும்பை , 10 ஆகஸ்ட் (ஹி.ச.)
மராட்டிய மாநிலம் கட்சிரோலி மாவட்டம் தனோரா தாலுகா ஜப்தலை கிராமத்தில் அரசு உதவி பெறும் பழங்குடியினர் உறைவிடப்பள்ளி செயல்பட்டு வருகிறது.
இந்த பள்ளியில் ஏராளமான மாணவிகள் விடுதியில் தங்கி படித்து வருகின்றனர்.
இந்த நிலையில், நேற்று இரவு மாணவிகள் விடுதி அறையில் தரையில் படுத்து தூங்கிக் கொண்டிருந்தனர்.
அப்போது எதிர்பாராதவிதமாக அறைக்குள் பாம்பு ஒன்று புகுந்தது. தூங்கிக் கொண்டிருந்த மாணவிகள் 6 பேரை அந்த பாம்பு கடித்ததாக கூறப்படுகிறது.
பாம்பு கடித்ததில் 8, 12 மற்றும் 14 வயதுடைய 3 மாணவிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 3 மாணவிகள் பாம்பு கடிக்கு ஆளான நிலையில், உடனடியாக ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.
அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். அவர்களின் உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையே, மாணவிகள் தங்கியிருந்த விடுதியில் போதிய பாதுகாப்பு வசதிகள் செய்யப்பட்டிருந்தனவா? பள்ளி நிர்வாகம் தேவையான பாதுகாப்பு விதிமுறைகளையும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் முறையாக பின்பற்றியதா? என்பது குறித்து விரிவான விசாரணை நடத்தப்படும் என்று மாவட்ட கலெக்டர் அவிஷ்யந்த் பாண்டா தெரிவித்துள்ளார்.
மேலும், பழங்குடியினர் மேம்பாட்டுத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தி, தேவையான தகவல்களை சேகரிப்பார்கள் என்றும் அவர் கூறினார்.
விசாரணையில் பள்ளி நிர்வாகத்தின் அலட்சியம் அல்லது பாதுகாப்பு குறைபாடுகள் இருப்பது தெரியவந்தால், சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA