நாடாளுமன்ற முடக்கத்துக்கு மோடி, அமித்ஷாதான் காரணம் மல்லிகார்ஜுன கார்கே குற்றச்சாட்டு
புதுடெல்லி , 10 ஆகஸ்ட் (ஹி.ச.) நாடாளுமன்றம் செயல்படாமல் இருப்பதற்கு பிரதமர் நரேந்திர மோடியும், மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவும், மத்திய அரசுமே காரணம் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றம்சாட்டினார். நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக
A


புதுடெல்லி , 10 ஆகஸ்ட் (ஹி.ச.)

நாடாளுமன்றம் செயல்படாமல் இருப்பதற்கு பிரதமர் நரேந்திர மோடியும், மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவும், மத்திய அரசுமே காரணம் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றம்சாட்டினார்.

நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது போலீசார் நடத்திய நடவடிக்கை தொடர்பாக மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா நாடாளுமன்றத்தில் விளக்கம் அளிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

இது தொடர்பாக எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருவதால், நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் நடவடிக்கைகளும் பாதிக்கப்பட்டுள்ளன.

தொடர்ந்து 4-வது வாரமாக இரு அவைகளிலும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில், நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் மல்லிகார்ஜுன கார்கே கூறியதாவது:-

மாணவர்கள் மீதான நடவடிக்கை குறித்து மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா அவைக்கு வந்து அறிக்கை அளிக்க வேண்டும் என்பதுதான் மக்களவை மற்றும் மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகளின் ஒரே கோரிக்கையாகும்.

உள்துறை மந்திரி அறிக்கை அளிக்க வேண்டும் என்று பிரதமர் ஏன் அறிவுறுத்தவில்லை? அவர்கள் நாடாளுமன்றம் செயல்படுவதை விரும்பவில்லை,

அவர்கள் பயப்படுகிறார்கள்.

ஏனெனில், அவர்கள் சில தவறுகளை செய்துள்ளனர்.

பிரதமரின் புகைப்படம் தினமும் செய்தித்தாள்களில் வெளியாகிறது.

அப்படியிருக்க அவர் நாடாளுமன்றத்துக்கு வருவதில் என்ன சிக்கல்? அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஒரு தீர்வைத்தான் கோருகிறார்கள்.

ஆனால், அவைத் தலைவர் எங்களை பேச ஏன் அனுமதிப்பதில்லை?

நாங்கள் வெறும் அறிக்கையைத்தான் கோருகிறோம்.

நாடாளுமன்றம் செயல்படாமல் இருப்பதற்கு பிரதமர் மோடியும், மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவும்தான் காரணம்.

இவ்வாறு மல்லிகார்ஜுன கார்கே கூறினார்.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA