Enter your Email Address to subscribe to our newsletters

தமிழ்நாடு, 10 ஆகஸ்ட் (ஹி.ச.)
மாமன்னர் ராஜேந்திர சோழனின் ஆடி திருவாதிரை பிறந்தநாளையொட்டி, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், அவருக்கு புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள சீமான்,
கடற்போரில் சிறந்து விளங்கிய ராஜேந்திர சோழன், வடஇந்தியா வரை படையெடுத்து கங்கைப் பகுதியை வென்றதுடன், தென்கிழக்கு ஆசிய நாடுகள் வரை சோழப் பேரரசின் ஆட்சிப் பரப்பை விரிவுபடுத்தியதாக குறிப்பிட்டுள்ளார்.
நீர் மேலாண்மை மற்றும் வேளாண் வளர்ச்சியில் சிறந்து விளங்கி, மக்களின் வறுமையைப் போக்கிய மாமன்னராக ராஜேந்திர சோழன் திகழ்ந்ததாகவும் சீமான் தெரிவித்துள்ளார்.
மேலும், கங்கைகொண்ட சோழபுரத்தை உருவாக்கி, மிகப்பெரிய ஏரியை அமைத்ததோடு, தமிழர்களின் கட்டிடக்கலை, படைப்பாற்றல் மற்றும் அறிவுத்திறனை உலகிற்கு பறைசாற்றும் வகையில் கங்கைகொண்ட சோழபுரம் பெருவுடையார் கோயில் உள்ளிட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க படைப்புகளை உருவாக்கியதாகவும் புகழாரம் சூட்டியுள்ளார்.
தமிழர்களின் வீரம், தீரம், அறம், அறிவு மற்றும் ஆற்றலை உலகறியச் செய்த தமிழ்ப்பேரரசர் ராஜேந்திர சோழனின் பிறந்தநாளில், அவரது பெரும்புகழைப் போற்றுவோம் என்றும் சீமான் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / GOKILA arumugam