Enter your Email Address to subscribe to our newsletters

திருமலை , 11 ஆகஸ்ட் (ஹி.ச.)
திருமலையில் ஏழுமலையானை தரிசிக்க பக்தர்கள் கூட்டம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் வைகுண்டம் கியூ காம்ப்ளக்ஸ் உள்ளிட்ட பகுதிகளில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.
கியூ காம்ப்ளக்சில் உள்ள அனைத்து காத்திருப்பு அறைகளும் பக்தர்களால் நிரம்பியுள்ள நிலையில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் வெளிப்புற கியூ வரிசைகளிலும் நீண்ட நேரமாக காத்திருக்கின்றனர்.
தற்போது நிலவும் கடும் கூட்டம் காரணமாக, எந்தவித தரிசன டோக்கனும் இல்லாமல் வரும் பொது பக்தர்கள் ஏழுமலையானை தரிசிக்க சுமார் 18 மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
நீண்ட நேரம் கியூ வரிசையில் காத்திருக்கும் பக்தர்களின் வசதிக்காக திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் பால், குடிநீர் மற்றும் அன்னபிரசாதம் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.
நேற்று (ஆகஸ்டு 10-ந் தேதி) ஒரே நாளில் 81,064 பக்தர்கள் ஏழுமலையானை தரிசனம் செய்தனர்.
இவர்களில் 33,136 பக்தர்கள் தலைமுடியை காணிக்கையாக செலுத்தினர். பக்தர்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கை மூலம் ஒரே நாளில் ரூ.5 கோடியே 36 லட்சம் வருவாய் கிடைத்துள்ளது.
திருமலையில் தொடர்ந்து பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால், தரிசன ஏற்பாடுகள் சீராக நடைபெற பக்தர்கள் தேவஸ்தான அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு ஒத்துழைக்க வேண்டும் என்றும், கோவில் விதிமுறைகளை தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் திருமலை திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA