Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 11 ஆகஸ்ட் (ஹி.ச)
சென்னை காமராஜர் சாலையில் உள்ள மாநிலக் கல்லூரி வளாகத்தில், “போதைப்பொருட்கள் இல்லாத தமிழ்நாடு” மாநில அளவிலான பெருந்திரள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி மற்றும் விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது.
முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்று போதைப்பொருட்களுக்கு எதிரான உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர். முதலமைச்சர் மாணவர்கள் முன்னிலையில் உறுதிமொழியை வாசிக்க, அதனைத் தொடர்ந்து மாணவர்கள் உறுதிமொழி ஏற்றனர்.
இதையடுத்து, “Drug & Tobacco-Free Campus” என்ற பிரசார விழிப்புணர்வு இயக்கத்தை முதலமைச்சர் விஜய் தொடங்கி வைத்தார். பள்ளி, கல்லூரி வளாகங்களை போதைப்பொருள் மற்றும் புகையிலைப் பயன்பாடு இல்லாத இடங்களாக மாற்றும் நோக்கில் இந்த விழிப்புணர்வு இயக்கம் தொடங்கப்பட்டது.
மேலும், போதைப்பொருள் உற்பத்தி மற்றும் சட்டவிரோதக் கடத்தலைத் தடுப்பதில் சிறப்பாகப் பணியாற்றிய 15 காவல்துறை அதிகாரிகளுக்கு “தமிழ்நாடு முதலமைச்சரின் காவல் பதக்கங்கள் – 2026” விருதுகளை முதலமைச்சர் வழங்கினார்.
பள்ளி மற்றும் கல்லூரிகளில் போதைப்பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வுப் பணிகளில் சிறப்பாகச் செயல்பட்ட சிறந்த Anti-Drug Clubs மற்றும் சிறந்த தன்னார்வலர் குழுக்களுக்கும் முதலமைச்சர் விருதுகளை வழங்கினார்.
நிகழ்ச்சி நிறைவடையும் தருணத்தில், விருது பெற்ற ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தீஷின் மகன் ஷன்முக் காவல்துறை சீருடையில் நிகழ்ச்சிக்கு வந்திருந்தார்.
இதைக் கவனித்த முதலமைச்சர் விஜய், சிறுவனை மேடைக்கு அழைத்து பாராட்டியதுடன், அவருடன் புகைப்படமும் எடுத்துக்கொண்டார்.
இந்தக் காட்சி நிகழ்ச்சியில் கவனம் ஈர்த்தது.
Hindusthan Samachar / P YUVARAJ