Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 11 ஆகஸ்ட் (ஹி.ச.)
தெலங்கானா சைபர் செக்யூரிட்டி பீரோ (TGCSB), டெல்லியில் செயல்பட்டு வந்த மோசடி கால் சென்டர் வலையமைப்பை கண்டுபிடித்து, 21 தெலுங்கு பேசும் பெண் டெலிகாலர்களையும், ஒரு வங்கி கணக்கு வைத்திருப்பவரையும் கைது செய்துள்ளது.
தெலங்கானா முழுவதும் பொதுமக்களை குறிவைத்து சைபர் மோசடியில் ஈடுபட்டதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், டெல்லி சிவா மார்க்கெட் பகுதியில் செயல்பட்டு வந்த 3 கால் சென்டர்களில் அதிகாரிகள் ஒருங்கிணைந்த சோதனை நடத்தினர்.
இந்த கால் சென்டர்கள் சுமார் ஒன்றரை ஆண்டுகளாக செயல்பட்டு வந்ததாகவும், லலித் சிங், குல்தீப் சிங் மற்றும் அனில் ஆகிய மூன்று குழுத் தலைவர்கள் அவற்றை நடத்தி வந்ததாகவும் TGCSB தெரிவித்துள்ளது. இவர்கள் தற்போது தலைமறைவாக உள்ளனர்.
தெலங்கானாவைச் சேர்ந்த தெலுங்கு பேசும் பெண்களை டெலிகாலர்களாக பணியமர்த்தி, அவர்களின் மூலம் பொதுமக்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்தி மோசடியில் ஈடுபட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
குறிப்பாக,பஜாஜ் பைனான்ஸ் நிறுவனத்தின் பிரதிநிதிகள் போல் நடித்து, குறைந்த வட்டியில் கடன் பெற்றுத் தருவதாகவும், கடன் உடனடியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளதாகவும் கூறி பொதுமக்களை ஏமாற்றியுள்ளனர்.
பின்னர், கடன் தொகையைப் பெறுவதற்காக ப்ராசசிங் பீஸ், வெரிஃபிகேஷன் சார்ஜ்,டாக்குமெண்டேஷன் சார்ஜ்,இன்சூரன்ஸ் பிரீமியம் Iஉள்ளிட்ட பல்வேறு காரணங்களைக் கூறி, பாதிக்கப்பட்டவர்களிடம் பணம் செலுத்துமாறு வலியுறுத்தியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த மோசடி கும்பலின் செயல்பாடுகள் குறித்து TGCSB தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறது.
Hindusthan Samachar / VINOTH KUMAR P