Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 11 ஆகஸ்ட் (ஹி.ச.)
79-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு சென்னையில் பாதுகாப்பு ஏற்பாடுகளும், விழா ஒத்திகை பணிகளும் தீவிரமடைந்துள்ளன. இதன் ஒரு பகுதியாக, சென்னை தலைமைச் செயலகம் அருகே உள்ள ராஜாஜி சாலையில் இன்று இரண்டாவது முறையாக அணிவகுப்பு ஒத்திகை நடைபெற்று வருகிறது.
கோட்டை கொத்தளத்தில் வரும் 15-ம் தேதி நடைபெற உள்ள சுதந்திர தின விழாவில் முதலமைச்சர் தேசியக் கொடியேற்றி வைத்து உரையாற்ற உள்ளார். இதையொட்டி ராணுவம், கடற்படை, விமானப்படை, தமிழ்நாடு காவல்துறை, சிறப்பு காவல் படை, ஊர்க்காவல் படை, தேசிய மாணவர் படை உள்ளிட்ட பல்வேறு படைப்பிரிவுகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான வீரர்கள், வீராங்கனைகள் இந்த ஒத்திகையில் பங்கேற்றுள்ளனர்.
காலை முதலே ராஜாஜி சாலை மற்றும் கொத்தவால் சாவடி பகுதியில் இருந்து கோட்டை வரையிலான சாலையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு, அணிவகுப்பு ஒத்திகை நடைபெற்று வருகிறது. வீரர்களின் கம்பீரமான அணிவகுப்பும், இசைக் குழுவினரின் சீரான இசையும் பொதுமக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்த ஒத்திகையை முன்னிட்டு, ராஜாஜி சாலை, என்.எஸ்.சி. போஸ் சாலை மற்றும் பாரிமுனை சுற்றுவட்டாரப் பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. வாகன ஓட்டிகள் மாற்றுப் பாதைகளை பயன்படுத்துமாறு சென்னை போக்குவரத்து காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.
சுதந்திர தினத்தன்று நடைபெற உள்ள நிகழ்ச்சிகளுக்கான இறுதிக்கட்ட ஒத்திகை நாளை நடைபெறும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Hindusthan Samachar / vidya.b