Enter your Email Address to subscribe to our newsletters

தருமபுரி, 11 ஆகஸ்ட் (ஹி.ச.)
கர்நாடக மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக கபினி மற்றும் கே.ஆர்.எஸ் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனையடுத்து அந்த அணைகளில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
இதன் காரணமாக தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து காணப்படுகிறது.
கடந்த சில தினங்களாக வினாடிக்கு 8,000 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில், தற்போதும் அதே அளவில் நீர்வரத்து நீடிக்கிறது. நீர்வரத்து மேலும் அதிகரிக்கக் கூடும் என நீர்வளத்துறையினர் எதிர்பார்க்கின்றனர்.
நீர்வரத்து அதிகரிப்பால் ஒகேனக்கல் ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
இதனால் ஒகேனக்கல் அருவியின் அழகை காண சுற்றுலா பயணிகள் வருகை தந்தாலும், பாதுகாப்பு கருதி அவர்கள் ஆற்றில் இறங்கி குளிக்கவும், பரிசலில் செல்லவும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.
சுற்றுலா பயணிகளின் நலன் கருதி குளிக்கவும் பரிசல் இயக்கவும் மாவட்ட நிர்வாகம் சார்பாக தடை விதிக்கப்பட்டதாகவும், மறு உத்தரவு வரும் வரை இந்த தடை நீடிக்கும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நீர்வரத்து நிலவரத்தை நீர்வளத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
இதற்கிடையே ஒகேனக்கல் நீர்வரத்து அதிகரிப்பால் மேட்டூர் அணைக்கும் நீர்வரத்து உயர்ந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Hindusthan Samachar / vidya.b