Enter your Email Address to subscribe to our newsletters

திருமலை , 12 ஆகஸ்ட் (ஹி.ச.)
திருமலை ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக பக்தர்கள் கூட்டம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இதனால் வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் உள்ள அனைத்து அறைகளும் நிரம்பியதுடன், பக்தர்களின் நீண்ட வரிசை வெளிப்பகுதி வரையிலும் நீண்டுள்ளது.
பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ளதை கருத்தில் கொண்டு, திருமலை திருப்பதி தேவஸ்தானம் (டி.டி.டி.) முக்கிய முடிவு எடுத்துள்ளது.
அதன்படி, வியாழக்கிழமை தரிசனத்துக்காக நேற்று வழங்கப்பட வேண்டிய சர்வ தரிசன (எஸ்.எஸ்.டி.) டோக்கன் வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளது.
தற்போது டோக்கன் இல்லாமல் வரும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய சுமார் 18 மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.
எனவே, டோக்கன் பெறுவதற்காக திருப்பதியில் உள்ள விஷ்ணு நிவாஸ், ஸ்ரீநிவாசம் மற்றும் பூதேவி காம்ப்ளக்ஸ் மையங்களுக்கு பக்தர்கள் வர வேண்டாம் என்று டி.டி.டி. அறிவுறுத்தியுள்ளது.
டோக்கனுக்காக காத்திருக்காமல், பக்தர்கள் நேரடியாக திருமலைக்கு சென்று சர்வ தரிசன வரிசையில் சேரலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில், வெள்ளிக்கிழமை தரிசனத்துக்கான எஸ்.எஸ்.டி. டோக்கன்கள் வியாழக்கிழமை வழக்கம்போல் வழங்கப்படும் என்று டி.டி.டி. தெரிவித்துள்ளது.
ரூ.4.46 கோடி உண்டியல் வசூல்
செவ்வாய்க்கிழமை திருமலை ஏழுமலையானை 78 ஆயிரத்து 956 பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
31 ஆயிரத்து 14 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். கோவில் உண்டியல் மூலம் ரூ.4 கோடியே 46 லட்சம் வருவாய் கிடைத்ததாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதற்கிடையே, திருமலை ஏழுமலையான் கோவிலில் வருகிற 23-ந்தேதி முதல் 25-ந்தேதி வரை பவித்ரோற்சவம் நடைபெற உள்ளது.
இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA