Enter your Email Address to subscribe to our newsletters

அமராவதி , 12 ஆகஸ்ட் (ஹி.ச.)
ஆந்திர மாநில முன்னாள் முதல்-மந்திரியும், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி தலைவருமான ஜெகன் மோகன் ரெட்டி நாளை கர்னூல் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
இதுகுறித்து ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி தலைமை வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது :
சமீபத்தில் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ள ஆலூர் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. விருபாக்ஷியை கர்னூல் மாவட்ட சிறைக்கு சென்று சந்தித்து பேசுகிறார்.
விருபாக்ஷியிடம் நலம் விசாரிக்கும் ஜெகன், அவரது குடும்பத்தினரையும் சந்தித்து ஆறுதல் கூறி, அவர்களுக்கு தைரியம் அளிக்க உள்ளார்.
கூட்டணி அரசு ஆட்சிக்கு வந்த பிறகு ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் மீது பழிவாங்கும் நோக்கத்துடன் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, தொடர்ந்து துன்புறுத்தப்படுவதாக அக்கட்சி குற்றம்சாட்டி வருகிறது.
இதன் தொடர்ச்சியாகவே ஜெகனின் கர்னூல் மாவட்ட பயணம் அமைய உள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
தொண்டர்களுக்கு துணை
கர்னூல் மாவட்ட சிறையில் உள்ள கட்சி நிர்வாகிகளை சந்தித்து அவர்களுக்கு ஜெகன் ஆறுதல் கூற உள்ளார்.
கட்சி தலைவர்கள் மற்றும் தொண்டர்களுக்கு எந்த பிரச்சினை ஏற்பட்டாலும் கட்சியின் மேலிடம் முழுமையாக துணை நிற்கும் என்றும், சட்டரீதியாகவும், ஜனநாயக ரீதியிலும் போராடி பழிவாங்கும் நடவடிக்கைகளை எதிர்கொள்வோம் என்றும் அவர் தெரிவிக்க உள்ளதாக கட்சி வட்டாரங்கள் கூறின.
கட்சியினருக்கு தைரியம் அளிக்கும் வகையிலும், அவர்களது குடும்பங்களுக்கு உறுதுணையாக இருப்பதை வெளிப்படுத்தும் வகையிலும் இந்தப் பயணம் அமையும் என ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தனர்.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA